
வங்கதேச உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வடகிழக்கு எல்லைப் பகுதி சில்ஹெட் வழியாக இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முயன்றபோது வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
வங்கதேச உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டுப் பிரிவின் முன்னாள் நீதிபதியான சம்சுதீன் சௌத்ரி மாணிக் வங்கதேசத்தின் சில்ஹெட்டில் உள்ள கனைகத் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவிற்குள் தப்பிச்செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படையினர் குறுஞ்செய்தி வழியாகப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அவாமி லீக் தலைவர் ஏஎஸ்எம் ஃபிரோஸ் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்ட செய்தி வெளியாகி சிறிது நேரத்தில் முன்னாள் நீதிபதி கைது செய்யப்பட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், எல்லையில் கைது செய்யப்பட்ட அவர் இரவு முழுக்க அங்குள்ள நிலையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடஒதுக்கீடு தொடர்பான வன்முறையால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அரசு கவிழ்த்தப்பட்டதால், அவர் ஆகஸ்ட் 5 அன்று இந்தியாவிற்கு தப்பியோடினார்.அரசுக்கு எதிரான இந்த வன்முறையால் 500-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் ஆகஸ்ட் 8 அன்று இடைக்கால அரசின் தலைமைப் பதவியேற்றார்.
கடந்த ஆகஸ்ட் 5 முதல், பல முன்னாள் அமைச்சர்கள் உள்பட, பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அனிசுல் ஹுக் மற்றும் முன்னாள் பிரதமரின் ஆலோசகர் சல்மான் எப் ரஹ்மான் ஆகியோர் தாக்காவில் இருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறப்பட்டுக் கைது செய்யப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, தொலைக்காட்சி செய்தியாளர் சோடி ஃபர்ஜானா ரூபா மற்றும் அவரது கணவர் ஷகில் அகமது ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.