
பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியம்ஸின் மனைவியும் அடுத்த பட்டத்து இளவரசியுமான கேத் மிடில்டன், புற்றுநோய் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் கண்டுவருவதாகத் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட பிறகு, முதல் முறையாக சனிக்கிழமை நடைபெற்ற அரச படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கேத் மிடில்டன்.
எனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுவருகிறேன். ஆனால், கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது, நல்ல நாள்களும் இருக்கும், மோசமான நாள்களும் இருக்கும் என்று வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒருபதிவை இட்டுள்ளார்.
இளவரசர் வில்லியம்ஸின் மனைவியும் 42 வயதாகும் இளவரசியுமான கேத் மிடில்டன், இந்த ஆண்டு துவக்கம் முதலே பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில்தான், கடந்த மார்ச் மாதம், குறிப்பிட்டுச் சொல்ல இயலாத புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு, அதற்காக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்திருந்தார்.
மேலும், இந்த வார இறுதியில் நடைபெறும் மன்னரின் பிறந்தநாள் அணிவகுப்பிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று காத்திருப்பதாகவும் வருங்காலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க வேண்டும் என்று எனது குடும்பத்தினரும் விரும்புகிறார்கள், ஆனால், அவர்களுக்கும் நன்கு தெரியும், நான் சிகிச்சையிலிருந்து முழுக்க வெளியேறவில்லை என்பது என்றும் மிடில்டன் பதிவிட்டிருக்கிறார்.
கேத் மிடில்டனின் பதிவுக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் வகையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், அந்த பதிவை மேற்கோள்காட்டி, வேல்ஸ் இளவரசியின் பேச்சு, ஒட்டுமொத்தமாக புற்றுநோயால் பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் உள்ளது.
அவரது வார்த்தைகளில், போராட்டமும், அதேநேரத்தில நம்பிக்கை மற்றும் அவரது வலிமையும் வெளிப்படுகிறது என்று பதிவிட்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.