

நைஜீரியாவில் அடுத்தடுத்து 3 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு 18 பேர் பலியானார்கள்.
நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் உள்ள குவோசா நகரில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் திருமண விழாவில் குழந்தையுடன் வந்த பெண் ஒருவர் தன்னிடமிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். தொடர்ந்து பொது மருத்துவமனையை குறிவைத்தும், பின்னர் திருமண குண்டுவெடிப்பில் பலியானவர்களின் இறுதிச்சடங்கு என அடுத்தடுத்து 2 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 18 பேர் பலியானதாக போர்னோ மாநில அவசர மேலாண்மை அமைப்பின் இயக்குநர் ஜெனரல் பேகிண்டோ சைது உறுதிப்படுத்தினார். மேலும் 48 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் என்ற பயங்கரவாத அமைப்பு கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும், பொதுமக்களை கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.