

பாகிஸ்தானின் மிகப் பெரிய துறைமுக நகரமான கராச்சியில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தில் சமையல் எரிவாயு வெடித்ததில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
உலகம் முழுவதும் ரமலான் மாத நோன்புகாலம் துவங்கியுள்ளதால் கராச்சி நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் வசித்து வரும் மக்கள், வியாழக்கிழமை (பிப். 19) அதிகாலை உணவு சமைக்கும் பணிகளை மேற்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, திடீரென அங்குள்ள ஒருவீட்டில் சமையல் எரிவாயு வெடித்ததில், அந்தக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து சரிந்துள்ளது. இதில், ஏராளமான மக்கள் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில், முதலில் 13 பேர் பலியானதாகக் கூறப்பட்ட நிலையில் இடிபாடுகளிலிருந்து மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதால் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், பலியானவர்களின் குடும்பத்துக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி இரங்கல் தெரிவித்ததுடன், அவர்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சிந்து மாகாண அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கராச்சி போன்ற பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சமையலுக்காகப் பெரும்பாலும் இயற்கை எரிவாயு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2025 ஜூலை மாதம் இஸ்லாமாபாதில் நடைபெற்ற திருமண விழாவில் ஏற்பட்ட சமையல் எரிவாயு வெடிப்பில் மணமகன் மற்றும் மணமகள் உள்பட 8 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.