புது தில்லி: உலக அளவில் 2023ஆம் ஆண்டில் வெளியான சிறந்த படங்களுக்கும், அதில் பங்கேற்றவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவிக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது.
96வது ஆஸ்கர் விருது விழாவில், ஆவணப்படங்களுக்கான பிரிரவில், இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட 'டு கில் எ டைகர்' ஆவணப்படம் விருதை இழந்துள்ளது. ஆவணப்படங்களுக்கான விருதை '20 டேய்ஸ் இன் மரியுபோல்' வென்றுள்ளது.
உக்ரேனிய திரைப்படத் தயாரிப்பாளரும் போர் தொடர்பான செய்திகளை தொடர்ந்து அளித்து வருபவருமான மிஸ்டைஸ்லாவ் கெர்நோவ் இயக்கிய, "20 டேய்ஸ் இன் மரியுபோல்", ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு மரியுபோலில் சிக்கிய உக்ரேனிய பத்திரிகையாளர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.
கனடா நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பான, "டு கில் எ டைகர்" புது தில்லியில் பிறந்த நிஷா பஹுஜாவால் தயாரிக்கப்பட்டது. இவர் டோரண்டோவில் வாழ்ந்து வருகிறார். இவரது ஆவணப் படங்கள் எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.