இத்தாலிய பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் மாற்றியமைக்கப்பட்ட அவரது படங்கள் குறித்த விவகாரத்தில் அதனை உருவாக்கியவர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இழப்பீடு கோரியுள்ளார்.
அவதூறுக்கான இழப்பீடாக 1 லட்சம் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.90 லட்சம்) மெலோனி கோரியுள்ளார்.
அவர் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு 2022-ம் ஆண்டு மெலோனியின் முகம் டீப் பேக் தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்ட அமெரிக்காவின் பாலியல் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டது. லட்சக்கணக்கானோர் அதனை பார்வையிட்டனர்.
செயற்கை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டும் டீப் ஃபேக் தொழில்நுட்பம் மூலம் பல பிரபலங்களின் படங்கள், விடியோக்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை வேறு ஒரு விடியோவில் பொருத்திய டீப் ஃபேக் விவகாரம் இந்தியாவில் பெரும் பேசுபொருளானது. இப்படியான விவகாரங்களில் குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்படுவது வழக்கமான நடைமுறை.
இதில் இழப்பீடு கோருவது என்பது இனி பாதிக்கப்படும் பெண்களுக்கு, இதுபோன்று பாதிக்கப்பட்டால் வழக்குத் தொடர பயப்பட வேண்டியதில்லை என்கிற செய்தியை இந்த வழக்கு தரும் என மெலோனியின் வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
40 வயது மனிதரும் அவரது 73 வயதான தந்தையும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இத்தாலியின் சட்ட விதிகள் படி அவதூறுக்கான அதிகபட்ச தண்டனைக் காலம் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகளுக்குள் முடிவடைந்து விடும்.
இந்த வழக்கில் பிரதமர் 800 கிமீ தொலைவில் உள்ள சாஸாரி நீதிமன்றத்தி ஜூலை 2 அன்று சாட்சியளிக்க செல்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.