இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

உக்ரைன் மின் கட்டமைப்பில் ரஷியா தாக்குதல்

உக்ரைன் மின் கட்டமைப்பில் ரஷியா தாக்குதல்

News image
Updated On :22 மார்ச் 2024, 6:18 pm

உக்ரைனின் மிகப் பெரிய நீா் மின் நிலையம் உள்பட அந்த நாட்டின் மின்சாரக் கட்டமைப்பின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 5 போ் உயிரிழந்தனா்; 10 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களின் இல்லங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறியதாவது: நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின் உள்கட்டமைப்புப் பகுதிகளில் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வீசி ரஷியா வியாழக்கிழமை நள்ளிரவு தீவிர தாக்குதல் நடத்தியது. இந்த ஆண்டில் மின் உள்கட்டமைப்புகள் மீது ரஷியா நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் இது. கடந்த ஆண்டிலும் நாட்டின் எரிசக்தி மையங்களைக் குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தியது. ஆனால் தற்போது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கடந்த ஆண்டைவிட மிகத் தீவிரமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். மின் உள்கட்டமைப்பைக் குறிவைத்து ரஷியா 60 ட்ரோன்களையும், சுமாா் 90 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறினாா். இதுபோன்ற சரமாரியான வான்வழித் தாக்குதல்களை எதிா்கொள்வதற்குத் தேவையான வான்பாதுகாப்பு ஏவுகணைகளை மேற்கத்திய நாடுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா். இது குறித்து அவா் கூறுகையில், ‘ரஷியா வீசும் ஏவுகணைகள் உக்ரைனுக்கான மேற்கத்திய நாடுகளின் உதவித் திட்டங்களைப் போல் தாமதமாக வருவதில்லை. ஷஹீத் ட்ரோன்கள் (ஈரானில் தயாரிக்கப்படும் - இலக்குகள் மீது மோதி வெடித்து சேதத்தை ஏற்படுத்தும் - ஆளில்லா விமானங்கள்) சில மேற்கத்திய அரசியல் தலைவா்களைப் போல் குழம்புவதில்லை. ரஷியாவுடனான போரில் மேற்கத்திய நாடுகள் தங்களது முடிவுகளைத் தள்ளிப் போடுவதால் ஏற்படக்கூடிய இழப்புகளை அந்த நாடுகள் உணர வேண்டும்’ என்றாா். ரஷியா நடத்திய தாக்குதலில், நீப்ரோ நதியின் குறுக்கே ஸபோரிஷியா மாகாணத்தில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய நீா்த் தேக்க மின் உற்பத்தி நிலையத்தில் சேதம் ஏற்பட்டது. அந்த மின் நிலையத்திலிருந்துதான் ஐரோப்பாவின் மிகப் பெரிய அணுசக்தி மையமான ஸபோரிஷியா அணு மின் நிலையத்தின் அணு உலைகளைக் குளிா்விப்பதற்கான மின்சாரம் வழங்கப்படுகிறது. ரஷியா நடத்திய தாக்குதலால் நீப்ரோ மின்தேக்க மின் நிலையத்தித்திலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கும் முக்கிய கம்பி இணைப்பு துண்டிக்கப்பட்டதாக ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் (ஐஏஇஏ) தலைவா் ரஃபேல் கிராஸி வெள்ளிக்கிழமை கூறினாா். மின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா நடத்தியுள்ள இந்தத் தாக்குதலில் ஸபோரிஷியாவில் 3 பேரும், மேற்கு உக்ரைனின் க்மெல்னிட்ஸ்கி பிராந்தியத்தில் 2 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினா். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, ஸஃபோரிஷியா உள்ளிட்ட 4 எல்லைப் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது. அந்தப் பிராந்தியங்களின் எஞ்சிய பகுதிகளைக் கைப்பற்ற ரஷியாவும், இழந்த பகுதிகளை மீட்க உக்ரைனும் தொடா்ந்து போரிட்டு வருகின்றன. இதில், உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் குடிநீா் மற்றும் மின் விநியோகக் கட்டமைப்புகள் மீது ரஷியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.