தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, மருத்துவப் பயன்பாட்டுக்கு கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஞ்சா சாகுபடி மற்றும் வர்த்தகத்தைக் கண்காணிக்க தனி சட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் இயற்றிய பாகிஸ்தான் அரசு, இதற்கென கஞ்சா கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்துள்ளது.
13 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஆணையத்தில், பல்வேறு அரசுத் துறைகள், புலனாய்வுத் துறைகள், தனியார் துறைகளில் உள்ள அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆணையத்தை அமைக்கக் கடந்த 2020-ல், இம்ரான் கான் பிரதமராக இருந்தபோதே பரிந்துரை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆசிய வளர்ச்சி வங்கி அறிக்கையின்படி, பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. எனவே, கஞ்சா சாகுபடி மற்றும் வர்த்தகம் மூலம் பாகிஸ்தான் தனது பொருளாதாரத்தை உயர்த்த முயல்கிறது.
ஐ.நா சட்டத்தின் படி, ஒரு நாடு கஞ்சா தொடர்பான பொருட்களை உற்பத்தி, வர்த்தகம் செய்ய விரும்பினால், அந்த நாடு கஞ்சா விநியோகச் சங்கிலியைக் கண்காணிக்க ஒரு கூட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது.
தவறான நோக்கங்களுக்காக கஞ்சாவைப் பயன்படுத்தினால் அதற்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. தனி நபர்களுக்கு அபராதமாக பாகிஸ்தான் ரூபாயில் 10 இலட்சம் முதல் 1 கோடியும், நிறுவனங்களுக்கு 1 கோடி முதல் 20 கோடியும் விதிக்கப்படும் என்றும், இந்த விதிமுறைகளுக்குட்பட்டு கஞ்சா வளர்ப்பதற்கான உரிமம் பாகிஸ்தான் அரசால் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.