விண்வெளியை மையமாக கொண்டு கண்காணிக்கும் திறனை செறிவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட முதல் செயல்பாட்டு உளவு செயற்கைக் கோள்களை அமெரிக்கா ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் புதன்கிழமை வானில் ஏவியுள்ளது.
இந்த ஆண்டு முழுவதும் அனுப்பப்படவுள்ள ஏவுகணைகள் வரிசையில் இது முதலாவதாக ஏவப்பட்டுள்ளது. உலகத்தின் எந்த மூலையில் உள்ள இலக்கையும் கண்காணிக்க கூடிய வகையில் திறன்வாய்ந்ததாக நூற்றுக்கணக்கான செயற்கை கோள்களை அமெரிக்க உளவுத் துறைக்கு ஸ்பேஸ்எக்ஸ் உருவாக்கியதாக ரைட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள வாண்டன்பெர்க் விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ஏவுகணை செயற்கை கோள்களுடன் கிழக்கு நேர மண்டலத்தின்படி அதிகாலை 4 மணிக்கு ஏவப்பட்டது.
அமெரிக்க தேசிய உளவுத் துறைக்கு (என்ஆர்ஓ) செயற்கைக்கோள்களை வடிவமைக்கும் நார்த்ரோப் க்ரம்மன் நிறுவனத்தோடு இணைந்து பணியாற்றுவதாக ஸ்பேஸ் எக்ஸ் ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தது.
சுமார் ஆறு கணைகள் இந்தாண்டு அனுப்பும் திட்டத்தில் அமெரிக்கா உள்ளதாக கூறப்படுகிறது. 2028 வரை இந்த அனுப்புதல்கள் தொடரவுள்ளன. எத்தனை செயற்கைக்கோள்கள் இந்த முறை அனுப்பப்பட்டது என்பது குறித்து விவரிக்கப்படவில்லை.
அமெரிக்கா தனது சில திட்டங்களுக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை சார்ந்து செயல்பட தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் மட்டுமில்லாது தனது ஸ்டார்லிங்க் மூலம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் உலகம் முழுவதும் மிகப்பெரிய செயற்கை கோள் இயக்கும் நிறுவனமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.