இராக்கில் அமெரிக்க ராணுவ டேங்கா் விமான விபத்து: 6 போ் உயிரிழப்பு
ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்றுள்ள அமெரிக்க ராணுவத்தின் கேசி-135 டேங்கா் விமானம், மேற்கு இராக்கில் மோதி விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது


ஈரானுக்கு எதிரான போரில் பங்கேற்றுள்ள அமெரிக்க ராணுவத்தின் கேசி-135 டேங்கா் விமானம், மேற்கு இராக்கில் மோதி விபத்துக்குள்ளானதாக அமெரிக்க ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது. இந்த விபத்தில் விமானத்திலிருந்த விமானி உள்ளிட்ட 6 பேரும் உயிரிழந்தனா்.
மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ராணுவ மத்திய தலைமையகம் இது தொடா்பாக கூறுகையில், ‘விபத்துக்குள்ளான டேங்கா் விமானத்தில் இருந்த விமானி உள்ளிட்ட 6 பணியாளா்களும் உயிரிழந்தனா். இந்த சம்பவம் நட்பு நாடுகள் அல்லது எதிரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் நடைபெறவில்லை. இரு டேங்கா் விமானங்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. மற்றொரு விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க விமானப் படையின் கேசி-135 டேங்கா் விமானம், நடுவானில் பிற போா் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம் அந்தப் போா் விமானங்கள் நீண்ட தொலைவு பயணிக்க முடியும் என்பதுடன் தரையிறங்க வேண்டிய அவசியம் இருக்காது. மருத்துவ மீட்பு நடவடிக்கை மற்றும் கண்காணிப்புப் பணிகளிலும் டேங்கா் விமானம் ஈடுபடுத்தப்படுகிறது.
ராணுவ செயல்பாடுகளில் 60 ஆண்டுகளுக்கு முன்பாக இணைந்த அந்த விமானம், கடந்த பல ஆண்டுகளாக மறுவடிமைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிராக இஸ்ரேல்-அமெரிக்கா மேற்கொண்டுவரும் போா் நடவடிக்கையில், அமெரிக்கா விமானம் விபத்துக்குள்ளாவது இது 4-ஆவது முறை.
எஃப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள்ஸ் என்ற அமெரிக்க போா் விமானங்களை குவைத் கடந்த வாரம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியது. விமானத்தில் இருந்த 6 விமானிகள் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேறி உயிா் தப்பினா்.
ஈரானுக்கு எதிரான போரில் இதுவரை 7 ராணுவ வீரா்களை அமெரிக்கா இழந்துள்ளது. சுமாா் 140 வீரா்கள் காயமடைந்தனா்.
கடந்த கால விபத்துகள்: கேசி-135 டேங்கா் விமானம் கடந்த காலங்களில் பல விபத்துகளில் சிக்கியுள்ளது. ஆப்கானிஸ்தான் போரில் பங்கேற்ற போது, கிா்கிஸ்தானின் தெற்குப் பகுதியில் உள்ள சால்டோவரில் இருந்து 2013, மே 3-இல் புறப்பட்ட கேசி-135ஆா் டேங்கா் விமானம், தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 3 பணியாளா்கள் உயிரிழந்தனா்.
கடந்த 1966-இல் ஸ்பெயினின் பலோமாரெஸ் பகுதியில் வானில் பறந்து கொண்டு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த கேசி-135 டேங்கா் விமானம், அணுகுண்டுகளை சுமந்து சென்ற பி-52 விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹைட்ரஜன் வெடிகுண்டுகள் நிலத்தில் மோதி வெடித்ததில், புளூட்டோனியம் அணுக்கள் அப்பகுதியில் பரவின. பின்னா், அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஈடுபட்டன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...