/

பாகிஸ்தானில் மொபைல், இணைய சேவைகள் முடக்கம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு ஆதரவாக நடத்தப்படும் போராட்டங்களைத் தடுக்க பல இடங்களில் மொபைல், இணைய சேவைகள் முடக்கம்.

News image

இஸ்லாமாபாத் நகருக்குள் வரும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தும் காவல்துறையினர் - AP

Updated On :24 நவம்பர் 2024, 1:25 pm IST

பாகிஸ்தானில் சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த இருப்பதாகக் கூறி பாதுகாப்புக் காரணங்களுக்காக பல இடங்களில் மொபைல் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது 150 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருப்பதால் ஓராண்டுக்கும் மேலாக அவர் சிறையில் உள்ளார். ஆனால் அவருக்கும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சிக்கும் மக்களிடையே இப்போதும் ஆதரவு உள்ளது. அவர் மீது அரசியல் காரணங்களுக்காக வழக்குகள் போடப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இம்ரான் கான் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் நேரடி போராட்டங்கள் மூலம் அவரை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு தலைநகர் இஸ்லாமாபாத் நகருக்குள் போராட்டக்காரர்கள் நுழைவதைத் தடுக்க எல்லையில் கப்பல் கண்டெயினர்களை வைத்து மூடியுள்ளனர். மேலும், முக்கிய சாலைகளை துண்டித்து, பிடிஐ கட்சி வலுவாக உள்ள பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணங்களுடன் நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளையும் மூடியுள்ளனர்.

இந்த நிலையில், மொபைல் மற்றும் இணைய சேவைகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசும் உள்துறை அமைச்சகமும் இன்று எக்ஸ் தளத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

எந்தெந்தப் பகுதிகளில் தடை என்றும், தடை உத்தரவு எப்போது வரை நீடிக்கும் என்று கூறப்படவில்லை. ஆனால், நாட்டின் மற்ற பகுதிகளில் இந்த சேவைகள் வழக்கம்போல தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

இத்துடன், சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்து விபிஎன் சேவைகளையும் முடக்கியுள்ளனர். இணைய சேவை தொடர்பான நிபுணர் குழுவான நெட்பிளாக்ஸ் கூறுகையில் தகவல்களைப் பகிர்வதைத் தடுக்க வாட்சப் சேவைகள் பாகிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

கடந்த மாதம் இம்ரான் கான் ஆதரவுப் பேரணியைத் தடுத்து நிறுத்த இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் செல்போன் மற்றும் இணைய சேவைகளை அரசு நிறுத்திவைத்தது. இதனால், அங்கு தகவல்தொடர்பு நிறுத்தப்பட்டு வங்கி, போக்குவரத்து மற்றும் உணவு டெலிவரி சேவை போன்றவை பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.