பத்திரிகையாளர்கள் 5 பேரை கொன்ற இஸ்ரேல்!

இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் உடலை கட்டியணைத்து அழும் உறவினர்.
கொல்லப்பட்ட பத்திரிகையாளரின் உடலை கட்டியணைத்து அழும் உறவினர்.
Published on
Updated on
1 min read

காஸாவில் வான்வழித் தாக்குதல் மூலம் பத்திரிகையாளர்கள் 5 பேரை இஸ்ரேல் ராணுவம் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பத்திரிகையாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்துள்ள பாலஸ்தீன் ஊடக அமைப்பினர், “பாலஸ்தீன பத்திரிகையாளர்களுக்கு எதிராக குறிவைத்து நடத்தப்படும் இத்தகையக் கொடுமைகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இதன் மூலம், இஸ்ரேலின் பாசிசத்தை நாங்கள் அம்பலப்படுத்துவதை ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என்று உறுதியாகத் தெரிவிக்கிறோம்.

காஸா பகுதியில் செய்தியாளர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களை நிறுத்த சர்வதேச ஊடகங்கள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி, இதுபோன்ற பழிவாங்கும் நோக்கத்திலான கொலைகளுக்கு பாசிச இஸ்ரேல் அரசு பொறுபேற்க வேண்டும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் அல்-கிஸா டிவி நிருபர் சயீது ரத்வான், சனத் செய்தி நிறுவன நிருபர் ஹம்ஸா அபு சல்மியா, அல்-குத்ஸ் அமைப்பின் நிருபர் ஹனீன் பரூத், சாத் அல்-சகீப் செய்தி நிறுவனத்தின் அப்துல் ரகுமான் அல்-தனானி மற்றும் சுயாதீன நிருபராகப் பணியாற்றும் நாதியா அல்-சயீத் ஆகியோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள லெபனான் தகவல் துறை அமைச்சர் ஸியாத் மகாரே, “தாக்குதல் நடைபெற்ற இடத்தில் 7 ஊடகங்களைச் சேர்ந்த 18 பத்திரிகையாளர்கள் இருந்தனர். அவர்களைக் கண்காணித்து, குறிவைத்து, முன்கூட்டியே திட்டமிட்டு இந்த படுகொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அக். 23 அன்று அல் ஜசீரா நிறுவனத்தில் பணியாற்றிய 6 பத்திரிகையாளர்களின் பட்டியலை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம் அவர்களை பாலஸ்தீன் ஆயுதக் குழுக்களின் உறுப்பினர்கள் எனக் குற்றஞ்சாட்டியது.

இந்த குற்றச்சாட்டுகளை "ஆதாரமற்றது" என்று நிராகரித்த அல் ஜசீரா, "நாட்டில் எஞ்சியிருக்கும் சில பத்திரிகையாளர்களை மௌனமாக்குவதற்கான அப்பட்டமான முயற்சி இது. இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள மக்களிடமிருந்து போரின் மோசமான உண்மைகளை இஸ்ரேல் மறைக்கிறது" என தெரிவித்தது.

பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ள தகவலின்படி காஸா மற்றும் லெபனானில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இஸ்ரேல் ராணுவத்தால் 131 செய்தியாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

பாலஸ்தீன் அதிகாரிகள் அளித்த தகவலின்படி இதுவரை 176 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும், காஸாவில் இருந்து 70-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை இஸ்ரேல் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com