புத்தாண்டு நாளிலும் காஸா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வடக்கு காஸாவின் ஜபாலியா பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் இன்று (ஜன. 1) குண்டுமழை பொழிந்தது.
இஸ்ரேல் ராணுவத்தின் இந்தத் தாக்குதலில் 6 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
இதேபோன்று மத்திய காஸாவிலுள்ள மகாஸி முகாம் மீதும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. காஸாவில் வீடுகளை இழந்த மக்கள் மகாஸி முகாமில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். பல்வேறு மக்கள் படுகாயமடைந்தனர்.
பாலஸ்தீனத்தின் காஸா எல்லைக்குட்பட்ட ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது.
இந்தப்போரில் காஸாவின் பெரும்பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் தரைமட்டமாக்கியதுடன், தற்போது தரைவழித் தாக்குதலும் நடத்தி வருகிறது.