இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இடையே சிக்கியுள்ள காஸாவின் மக்கள் தொடர் வன்முறைச் சம்பவங்களுக்கு பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். காஸா மண்ணில் சிந்தும் ரத்தம் காய்ந்தபாடில்லை.
காஸாவில் உள்ள ரஃபா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய மற்றும் தெற்கு காஸாவில் தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ள இஸ்ரேல் கடந்த புதன்கிழமை 147 பேரைக் கொலை செய்துள்ளது.
காஸாவின் அல் அக்ஸா மார்டைர்ஸ் மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலில் தாக்குதல்களால் இதுவரை 23,357 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 59,410-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அக்டோபர் 7-ல் ஹமாஸ், இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,139.
சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவால் இஸ்ரேலின் மீது இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்ட வழக்கு இன்று (ஜன.11) நீதிபதிகள் விசாரணைக்கு வருகிறது.
சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு போரில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துவது கேள்விக்குறிதான் என்ற போதிலும் இரண்டு நாள்களுக்கு இந்த விசாரணை நடைபெறவுள்ளது.
ரஷியா - உக்ரைன் போர் தொடர்பான வழக்கு விசாரணையில், ரஷியா உடனடியாக தாக்குதல்களை நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இன்றுவரை போர் முடிவுக்கு வராதது குறிப்பிடத்தக்கது.