இஸ்ரேலில் ஹமாஸ் படையினர் அக்.7 அன்று நடத்திய கொடூரத் தாக்குதலில் ஐநாவின் பாலஸ்தீன அகதிகள் முகமையின் பணியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 9 நாடுகள் அமைப்புக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்த முடிவு செய்தது.
இது தொடர்பாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா முகமையின் தலைவர் பிலிப் லாஸரினி, நடைபெற்று வரும் இஸ்ரேல் -ஹமாஸ் போருக்கு மத்தியில் இது போன்ற முடிவுகள் ஏற்கெனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்க செய்யும் என தெரிவித்துள்ளார்.
அவர், “காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு கூடுதலாக இன்னுமொரு கூட்டுத் தண்டனையைக் கொடுக்காதீர்கள். கறை அனைவருக்கும் பொருந்தும்” எனத் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
13 ஆயிரம் பணியாளர்கள் கொண்ட ஐநாவின் மேற்குறிப்பிட்ட பிரிவு, காஸாவில் வாழ்வாதார உதவிகளைக் கொண்டு சேர்ப்பதில் முதன்மையான அமைப்பாக செயலாற்றிவருகிறது.
அக்.7 தாக்குதலில் ஐநாவின் பணியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து தனது பணியாளர்களில் சிலரை நீக்கம் செய்ததாக முகமை தெரிவித்தது.
இதையும் படிக்க: அமெரிக்க போா்க் கப்பல் மீது ஹூதிக்கள் ஏவுகணை வீச்சு
23 லட்சம் மக்கள்தொகை கொண்ட காஸாவில் 20 லட்சத்துக்கும் அதிகமனோர் வாழ்வதற்கு தேவையான உணவு, வாழ்விடம் ஆகியவற்றுக்கு உதவிகளை நம்பியுள்ளனர். இந்த உயிர்நாடி எப்போது வேண்டுமானாலும் சீர்குலைய வாய்ப்பிருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.