
உக்ரைன் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல் நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிருப்தி தெரிவித்த நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த, 150 ட்ரோன்களை ரஷியா தயாராக வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாடிகனில் மறைந்த போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் மற்றும் இறுதி சடங்கில் உக்ரைன் அதிபர் வோலோதிமிர் ஸெலென்ஸ்கியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஒரே நேரத்தில் பங்கேற்றனர். மேலும், போப் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்திருந்த இருவரும் நெடுநேரம் பேசிக் கொண்டனர்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தமது ’ட்ரூத் சோஷியல்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், ``உக்ரைனில் நீடிக்கும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதில் புதினுக்கு விருப்பம் இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் எழுகிறது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் நகரங்கள் மீது ரஷியா ஏவுகணைகளை வீசுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. உக்ரைன் நகரங்கள் மீதான ரஷியாவின் தாக்குதல்களைப் பார்த்தால், போரை நிறுத்த புதின் விரும்பவில்லை என்றும், அவர் என்னை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் என்றும்கூட தோன்றுகிறது’’ என்று தெரிவித்தார்.
மேலும், ரஷியா மீது பொருளாதாரத் தடை கடுமையாக்கப்படும் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப்.