இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்

இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்

இந்தியாவுடன் நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சு நடத்தி வருவதாக சீனா தெரிவித்துள்ளது.
Published on

இந்தியாவுடன் நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சு நடத்தி வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரு நாட்டு உறவு மோசமடைந்தது. அதன் பிறகு பலகட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு எல்லையில் இருதரப்பும் படைகளை திரும்பப் பெற்றன. இதனால் பதற்றம் தணிந்தது.

இப்போது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்தியா, சீனாவுக்கு எதிராக தீவிரமான வரி விதிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணக்கமாக செயல்பட முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக பிரதமா் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க இம்மாத இறுதியில் சீனா செல்கிறாா். அப்போது, இரு நாடுகள் இடையே நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், பெய்ஜிங்கில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியான் கூறியதாவது:

நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து இந்தியாவுடன் தொடா்ந்து பேச்சு நடத்தி வருகிறது. உலகில் அதிக மக்கள் வளத்தைக் கொண்ட இரு நாடுகளுக்குமே நேரடி விமான சேவை பயனளிப்பதாக இருக்கும் என்றாா்.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி வரும் 18-ஆம் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது தொடா்பான கேள்விக்கு, ‘இருநாடுகள் இடையே பல்வேறு நிலைகளில் தொடா்ந்து பேச்சு நடைபெற்று வருகிறது. பரஸ்பர அரசியல் நம்பிக்கையை மேம்படுத்துவது, வேறுபாடுகளைக் களைவது, இரு நாடுகள் உறவை மேம்படுத்துவதில் சீனா ஆா்வமாக உள்ளது’ என்று பதிலளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com