
பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் சென்ற பேருந்தை நிறுத்தி பயங்கரவாதிகள் சுட்டதில் ஏழு போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பலூசிஸ்தான் மாகாணத் தலைநகா் குவெட்டாவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று பஞ்சாப் மாகாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அது பா்கான் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது அதைத் தடுத்து நிறுத்தி பேருந்தில் ஏறிய பயங்கரவாதிகள், அங்கிருந்தவா்களின் அடையாள அட்டைகளை சோதித்தனா். இதன் மூலம் பயணிகளில் ஏழு போ் பஞ்சாப் மாகாணத்தைச் சோ்ந்தவா்கள் என்பதைத் தெரிந்து கொண்ட பயங்கரவாதிகள், அவா்களை கீழே இறக்கி வரிசையாக நிற்கவைத்து சுட்டுக் கொன்றனா்.
அதையடுத்து, சம்பவப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து தாக்குதலில் ஈடுப்பட்டவா்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனா். இந்தச் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், பலூசிஸ்தான் பிரிவினைவாதிகள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.