/

இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்! ஹவுதிகள் பொறுப்பேற்பு!

டெல் அவிவ் நகரத்திலுள்ள விமான நிலையத்தின் மீதான ஏவுகணைத் தாக்குதல் குறித்து...

News image

ஹவுதி கிளர்ச்சிப்படையினர்... - ஏபி

Updated On :10 ஜூலை 2025, 7:54 pm IST

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு, யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

டெல் அவிவ் நகரத்திலுள்ள பென் குரியன் பன்னாட்டு விமான நிலையத்தின் மீது, பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இன்று (ஜூலை 10) தாக்குதல் நடத்தியுள்ளதாக, ஹவுதி கிளர்ச்சிப்படையின் செய்தித் தொடர்பாளர் யஹியா சரீயா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஹவுதி படையின் அதிகாரப்பூர்வச் செய்தித் தொலைக்காட்சியின் மூலம் அறிவித்த அவர், அந்த தாக்குதல் அதன் இலக்கை அடைந்ததாகக் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதலானது, பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் வன்முறைகளுக்கு பதிலடி என்று கூறிய அவர், இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு, நிவாரணப் பொருள்களின் முடக்கம் தளரும் வரை, செங்கடல் பகுதியில் வரும் இஸ்ரேல் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் மீதான தங்களது ஏவுகணைத் தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டெல் அவிவிலுள்ள விமான நிலையத்தைக் குறிவைத்து யேமன் நாட்டிலிருந்த நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை முறியடித்துள்ளதாக, இஸ்ரேல் ராணுவம் இன்று (ஜூலை 10) காலை கூறியிருந்தது.

இதேபோல், கடந்த ஜூலை 6 ஆம் தேதி பென் குரியன் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்கும், யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படையினர் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Yemen's Houthi rebels have claimed responsibility for a missile attack on the international airport in the Israeli capital, Tel Aviv.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.