
பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளரின் தந்தை அல்-காய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட அணு விஞ்ஞானி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் நிலவரங்கள் குறித்து பாகிஸ்தான் தரப்பில் வெளியிட்டு வருபவர் லெஃப்டினன் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி. இவர், அல் - காய்தா பயங்கரவாத அமைப்பின் அணு சக்தி விஞ்ஞானி என அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பால் தடை செய்யப்பட்டிருந்த பயங்கரவாதியின் மகன் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா தரப்பில் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்புகளின் ஒன்பது முகாம்கள் மீது இந்தியா சிந்தூர் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் மோதல் நிலவரங்களை, நாள்தோறும் பாகிஸ்தான் ஊடகங்களுக்கு லெஃப்டினன் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரிதான் விவரித்து வருகிறார்.
ஆனால், ஐக்கிய நாடுகள் அவையின் ஆவணங்களின்படி, சௌத்ரியின் தந்தை, சுல்தான் பஷிருதீன் முகமது, அமிருதசரஸில் பிறந்தவர். அல்-காய்தா அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின் லேடனுக்கு நன்கு அறிமுகமானாவர்.
அல் - காய்தா அமைப்புக்கு, அணு ஆயுதங்கள் தயாரிப்பு தொழில்நுட்பம் மற்றும் ஆணுஆயுதங்களின் பயன்பாட்டினால் ஏற்படும் பேராபத்துகள் குறித்து துல்லிய தகவல்களை முகமதுதான் அளித்ததாகவும், அணு ஆயுத தயாரிப்பு விவகாரத்தில் ஒசாமா பின் லேடனுக்கு உதவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
பாகிஸ்தானின் அணுசக்தி ஆணையத்திலிருந்து ஓய்வுபெற்ற முகமது, மதரீதியிலான மற்றும் அறிவியல் தொடர்புடைய பல புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். தற்போது 85 வயதாகும் முகமது, இஸ்லாமாபாத்தில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க.. இந்தியா பதிலடி: செய்திகள் - நேரலை!!
இவரது மகன்தான் லெஃப்டினன் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி, இவர் மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்று, பாகிஸ்தான் ராணுவத்தில் மிகப்பெரிய பதவியை அடைந்த முதல் நபர் என்றும் கூறப்படுகிறது.