
இந்தியாவுடன் போர் நிறுத்தம் செய்துகொள்ள சம்மதம் என்று அதிரடியாக அறிவித்துவிட்ட பாகிஸ்தான் சர்வதேச நாடுகளின் அழுத்தத்துக்குப் பணிந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளைச் சற்றும் எதிர்பார்த்திடாத பாகிஸ்தான் என்னவோ அதிர்ந்துபோனது மறுக்க முடியாத உண்மை.
‘ஆபரேஷன் சிந்தூர்’ பெயரில் இந்திய விமானப்படை பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளின் முகாம்களையும் வசிப்பிடங்களையும் அதிதுல்லியமாக தாக்கியதை பாகிஸ்தானால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தஞ்சமடைந்திருந்த 9 இடங்கள் துல்லியமாக தாக்கி அழிக்கப்பட்டன. இதனால் லஷ்கர் - இ - தய்பா,ஜெய்ஸ் - இ - முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத இயக்கங்கள் இழப்பைச் சந்தித்தன.
பாகிஸ்தான் ராணுவத்தின் முக்கிய தளமாக கருதப்படும் பஞ்சாப் மாகாணத்திலும் இந்திய படைகள் குறிவைத்து தாக்கின. பாகிஸ்தானின் வான் வெளி பாதுகாப்பு அமைப்பை முறியடித்துக் கடந்து சென்று, அந்நாட்டின் உள்பகுதிகளுள் இந்திய விமானப்படை தாக்குதல்களை நடத்தியது.
மேற்கண்ட ஆபரேஷனில் பொதுமக்கள் இழப்பை சந்திக்கக்கூடாது என்பதில் இந்திய ராணுவம் தீவிர முனைப்பு காட்டியது கவனிக்கத்தக்கது.
இதற்கு கடும் எதிர்வினையாற்றிய அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என்று அன்றைய இரவே சூளுரைத்தது. அதனைத்தொடர்ந்து, மறுநாளான புதன்கிழமையிலிருந்து(மே 7) இந்திய எல்லைக்குள் அத்துமீறி வான் வழி தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தியது. இன்று(மே 10) அதிகாலை வரையிலும் பாகிஸ்தானிலிருந்து டிரோன், ஏவுகணை தாக்குதல்கள் நீடித்தன. இப்போது வரை தொடருகின்றன...
ஆனால், இன்னொருபுறம் அமெரிக்கா தரப்பிலிருந்து பாகிஸ்தான் அரசுக்கு தொடர்ச்சியாக நெருக்கடி அளிக்கப்பட்டது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பாகிஸ்தான் பிரதமர், ராணுவ தளபதியுடன் பேச்சு நடத்தி இந்த சண்டை மிகப்பெரிய போராக விஸ்வரூபமெடுக்காமல் இருப்பதற்கு தீவிர முனைப்பு காட்டினார்.
அதன் எதிரொலியாக, இன்று(மே 10) மாலை போர் நிறுத்தம் செய்து கொள்கிறோம் என்ற அறிவிப்பு வெளியானது. பாகிஸ்தான் ராணுவ தலைமை இயக்குநர்கள் தரப்பிலிருந்து இந்திய ராணுவ தலைமை இயக்குநரகத்தை தொடர்புகொண்டு பேசி உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து, மாலை 5 மணியிலிருந்து போர் நிறுத்தம் அமலானது. தரை வழி, வான் வழி, கடல் வழி என இரு நாட்டு முப்படைகளும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மார்கோ ரூபியோ பேசியிருப்பதாவது; “கடந்த 48 மணி நேரமாக அமெரிக்க துணை அதிபர் ஜெ. டி. வான்ஸும் நானும் இந்திய, பாகிஸ்தான் பிரதமர்களுடனும், அவ்விரு நாட்டு மூத்த அதிகாரிகளுடனும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஆசிம் முனீருடனும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலுடனும் தொடர்ந்து பேச்சு நடத்தினோம்.
இந்தநிலையில், இந்திய, பாகிஸ்தான் அரசுகள் போரை உடனடியாக நிறுத்த சம்மதித்திருக்கின்றன. இரு நாடுகளுக்குமிடையிலான பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுவான இடத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளவும் உடன்பட்டுள்ளன.
இத்தருணத்தில், அமைத்திக்கான பாதையை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டிய பிரதமர்கள் மோடி, ஷெரீப் ஆகியோரின் முழு பங்களிப்பை மேற்கோள் காட்ட விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், போர் நிறுத்த அறிவிப்பை மீறி இந்திய எல்லைக்குள் மீண்டும் ட்ரோன்களை ஏவி தாக்குதல்களை தொடர்ந்து வருகிறது பாகிஸ்தான் ராணுவம். இந்திய ராணுவம் பாகிஸ்தானிலிருந்து ஏவப்படும் டிரோன்களை வானிலேயே இடைமறித்து அழித்து வருவதாக ராணுவம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதை இந்திய ராணுவம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.