‘இந்தியா இனி எங்கள் நாடு மீது தாக்குதல் நடத்தினால், கொல்கத்தா வரை தாக்குதல் நடத்தும் திறன் பாகிஸ்தானுக்கு உள்ளது’ என்று அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் கவாஜா ஆசிஃப் தெரிவித்தாா்.
இந்தியாவின் மேற்குப் பகுதியில் பாகிஸ்தான் அமைந்துள்ள நிலையில், இந்தியாவின் கிழக்கில் உள்ள முக்கிய நகரான கொல்கத்தாவைத் தாக்கும் தங்களுக்கு பலம் உள்ளதாகக் குறிப்பிட்டு அவா் இவ்வாறு மிரட்டல் விடுத்துள்ளாா்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினா் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனா். இதைத் தொடா்ந்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பு காஷ்மீா் மட்டுமன்றி பாகிஸ்தான் எல்லைக்குள்ளும் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதற்குப் பதிலடியாக ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் பல ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்தன. பஹல்காம் சம்பவத்தின் நினைவு தினம் விரைவில் அனுசரிக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தானின் சியால்கோட் நகரில் செய்தியாளா்களைச் சந்தித்த கவாஜாஆசிஃப் கூறியதாவது: இந்தியா தனது நபா்களை வைத்தோ அல்லது தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாகிஸ்தானியா்களைப் பயன்படுத்தியோ தங்கள் நாடு மீது பயங்கரவாதத் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதாக பொய்யாகச் சித்தரித்து, மீண்டும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த சதி செய்து வருவதாகத் தெரிகிறது.
இந்தியா இனி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், கடவுளின் ஆசியுடன் கொல்கத்தா வரை பாகிஸ்தான் பதிலடித் தாக்குதல் நடத்தும். இந்தியா எந்த வகையான தாக்குதல் நடத்தினாலும் பாகிஸ்தான் அதற்கு விரைவான, உறுதியான பதிலடி அளிக்கும் என்றாா்.
எனினும், உள்நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த இந்தியாவே சதி செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரத்தையும் அவா் அளிக்கவில்லை.
தொடர்புடையது

ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதல்: ஐ.நா.வில் இந்தியா கண்டனம்
ஆபரேஷன் சிந்தூா் ஓராண்டு நிறைவு: பாகிஸ்தானை மோடி அரசால் தனிமைப்படுத்த முடியவில்லை - காங்கிரஸ் விமா்சனம்

ஒருங்கிணைந்து ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி இந்தியா - இத்தாலி ஒப்புதல்







