

மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வேக வேகமாகச் செய்யப்பட்டுள்ளது. இது வாக்காளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்.
பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதிலிருந்து இது தடுக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஸ்டன் நகரிலிருந்து, பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், மேற்கு வங்க மாநிலம் சாந்தினிகேதனில் பிறந்தவருமான அமர்த்தியா சென், மிகக் கவனமாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில், சிறப்பு தீவிர திருத்தம் என்பது, ஜனநாயகத்தை வலுப்படுத்தும். ஆனால், போதுமான நேரம் இன்றி, மேற்கு வங்கத்தில் நடத்தி முடிக்கப்பட்டிருப்பது சரியான நடைமுறையல்ல.
மிக வேக வேகமாக சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில், தங்களது பெயர்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய ஆவணங்களை சமர்ப்பிக்க மக்களுக்கு போதுமான நேரம் வழங்கப்படவில்லை. இது வாக்காளர்களுக்கும் இந்திய ஜனநாயகத்துக்கும் சரியல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது, தான் ஏற்கனவே பல முறை வாக்களித்திருந்த சாந்தினிகேதனில், என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால், சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, எனது தாயின் வயதை உறுதி செய்யும் சான்றிதழும், என்னுடைய பிறப்புச் சான்றிதழும் கோரப்பட்டது. எனக்கு பிறப்பு சான்றிதழ் இல்லை. அப்போது, என்னுடைய தாயின் வயது மற்றும் என்னுடைய பிறந்த தேதியை உறுதி செய்யும் ஆவணங்களைக் கோரினர். ஆனால் என்னிடம் அவை இல்லை. எனக்குத் தெரிந்தவர்கள் உதவினர். ஆனால், உதவ ஆள் இல்லாதவர்களுக்கு என்னவாகும். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஏழைகளும், ஆதரவற்றவர்களும்தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டியது அவசியம். உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும், இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க சிரமப்படும் நிலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Amartya Sen's comments on West Bengal SIR say that injustice has been done to voters.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.