கொலம்பியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 15 பேர் பலியானதாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
கொலம்பியா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், வருகின்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் ஒருவரும் விமானத்தில் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொலம்பியா - வெனிசுவேலா எல்லையில் உள்ள குக்குட்டா நகரிலிருந்து ஒகானாவுக்கு கொலம்பியா அரசின் விமான நிறுவனமான சதேனா புதன்கிழமை புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 13 பயணிகளும், 2 விமானிகளும் பயணித்த நிலையில், ஒகானாவில் தரையிறங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னதாக விமானத்துடனான தொடர்பை கட்டுப்பாட்டு மையம் இழந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த பகுதியில் விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டின் விமானப் படை ஈடுபட்டு வந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாகவும், பயணித்த அனைவரும் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் கொலம்பியா எம்பி டியோஜெனெஸ் குயின்டெரோ மற்றும் வருகின்ற கொலம்பியா தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள கார்லோஸ் சல்செடோ உள்ளிட்டோர் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் விபத்துக்குள்ளான குக்கூட்டா மலைப் பகுதியானது, வானிலை மாற்றத்தை கணிக்க முடியாத வகையில் அடிக்கடி மாற்றம் ஏற்படும் தன்மைக் கொண்ட பகுதியாகும். இந்த பகுதியை கொலம்பியாவின் தேசிய விடுதலை ராணுவப் படையினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இந்த நிலையில், விமான விபத்தில் பலியானவர்களின் சடலங்களை மீட்பது மிகவும் சவால் நிறைந்ததாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.