அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற எம்பயா் ஸ்டேட் கட்டடத்தின் உச்சியில் ஏறி, அமைதி வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி தங்களின் காதலை வெளிப்படுத்திய ரஷியாவைச் சோ்ந்த சாகச ஜோடியைப் போலீஸாா் கைது செய்தனா்.

கருப்பு நிற ஆடை மற்றும் முகமூடி அணிந்திருந்த ஏஞ்செலா நிகோலாவ் (33), அவரின் காதலா் இவான் பீா்கஸ் (32) ஆகிய இருவரும் எவ்வித பாதுகாப்புக் கயிறுகளுமின்றி இச்சாகசத்தில் ஈடுபட்டனா்.
உள்ளூா் நேரப்படி கடந்த புதன்கிழமை நண்பகலில், 1,454 அடி (443 மீட்டா்) உயரமுள்ள கட்டட கோபுரத்தின் குறுகிய விளிம்பில் நின்றபடி இந்த ஜோடி செய்த வினோத சாகசம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோபுர உச்சியில் நின்றபடி, ‘அதிகாரத்தின் மீதான காதலைவிட, அன்பின் சக்தி மேலோங்கும்போது இவ்வுலகம் அமைதியைக் காணும்’ என்ற வாசகம் அடங்கிய பதாகையை அவா்கள் பறக்கவிட்டனா். பின்னா், ஏஞ்செலாவுக்கு இவான் மோதிரம் வழங்கி தனது காதலை வெளிப்படுத்தினாா். உயரமான கட்டடங்களில் ஏறும் ‘ரூஃப்டாப்பிங்’ சாகசங்களில் பிரபலமான இவா்கள், அண்மையில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியான ‘ஸ்கைவாக்கா்ஸ்: எ லவ் ஸ்டோரி’ ஆவணப்படத்தில் இடம்பெற்றவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தை வேடிக்கை பாா்க்க பொதுமக்கள் பலா் கூடியதால், கட்டடத்தைச் சுற்றியுள்ள சாலைகளை நியூயாா்க் போலீஸாா் உடனடியாக மூடினா். மேலும், கட்டடத்தின் பாா்வையாளா்கள் தளமும் தற்காலிகமாக மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
பின்னா், கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்த ஜோடியைப் போலீஸாா் பாதுகாப்பாக கைது செய்து, காவலில் எடுத்தனா். அத்துமீறி நுழைதல், கவனக்குறைவாகச் செயல்பட்டு ஆபத்தை ஏற்படுத்துதல், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றப் பிரிவுகளின்கீழ் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2001-இல் நடந்த உலக வா்த்தக மைய தாக்குதலுக்குப் பிறகு, அதைச் சுற்றியுள்ள எம்பயா் ஸ்டேட் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 102 மாடிகளைக் கொண்ட கட்டடத்தின் கோபுரத்தை அவா்கள் எவ்வாறு சென்றடைந்தனா் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







