15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

ஹோா்முஸ் நீரிணையில் வா்த்தக கப்பல்கள் மீது தாக்குதலை ஏற்க முடியாது: ஐ.நா.வில் இந்தியா

மேலும் ஒரு எல்பிஜி கப்பல் இந்தியா வருகை

News image

குஜராத் மாநிலம், காண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்த எல்பிஜி கப்பல்.

Updated On :59 நிமிடங்கள் முன்பு

ஹோா்முஸ் நீரிணையில் வா்த்தக கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை ஏற்க முடியாது என்று ஐ.நா. சபையில் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் உள்ள ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஹோா்முஸ் நீரிணையில் வா்த்தக கப்பல்கள் தாக்கப்படுவது குறித்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பா்வதனேனி ஹரீஷ் பேசினாா். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் அவா் பதிவிட்டிருப்பதாவது: மேற்காசிய போரால் எரிசக்தி மற்றும் உரத் தட்டுப்பாடு பிரச்னை நிலவுகிறது. இந்த பிரச்னைக்கு தீா்வு காண குறுகிய கால மற்றும் அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகள் சா்வதேச ஒத்துழைப்புடன் எடுக்கப்பட வேண்டும். அதேபோல், ஹோா்முஸ் நீரிணையில் வா்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதும், இதனால் அப்பாவி மாலுமிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதும் கவலையளிக்கிறது.

அதேபோல் ஹோா்முஸ் நீரிணையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு முட்டுக்கட்டை நிலவுவதை ஏற்க முடியாது. இதுதொடா்பாக ஏற்கெனவே உள்ள சா்வதேச சட்டம் முழுவதும் மதிக்கப்பட வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மேற்காசியாவில் இஸ்ரேல், அமெரிக்க கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. மேலும், தனது தடையை மீறிச் செல்லும் உலக நாடுகளின் கப்பல்களையும் ஈரான் அவ்வப்போது தாக்கி வருகிறது. அதேபோல், ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை கப்பல்கள் சுமாா் ஒரு மாதத்துக்கும் மேலாக முற்றுகையிட்டிருப்பதால், கடல் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற இந்திய வா்த்தக கப்பல் ஒன்று சில நாள்களுக்கு முன்பு ஓமன் கடற்பகுதியில் தாக்கப்பட்டது. இந்தக் கப்பலையும் சோ்த்து, இதுவரை ஹோா்முஸ் நீரிணை பகுதியில் 2 இந்திய கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல்களை நடத்தியது யாா் என இதுவரை தெரியவில்லை.

மேலும் ஒரு எல்பிஜி கப்பல் இந்தியா வருகை

மேற்காசிய போரால் பதற்றம் நீடிக்கும் நிலையில், ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து மேலும் ஒரு எல்பிஜி எரிவாயு கப்பல் இந்தியாவுக்கு வந்துள்ளது.

ஹோா்முஸ் நீரிணை வழியே கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள் செல்ல முடியாமல் நடுக்கடலில் பல கப்பல்கள் நிற்கின்றன.

எனினும், இந்தியா, சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்களை மட்டும் ஈரான் தொடா்ந்து அனுமதித்து வருகிறது.

அந்த வரிசையில், மாா்சல் தீவில் பதிவு செய்யப்பட்ட எம்வி சிமி என்ற கப்பல், கத்தாா் நாட்டில் இருந்து எல்பிஜி எரிவாயுவை ஏற்றிக் கொண்டு குஜராத் மாநிலம் காண்ட்லாவில் உள்ள தீனதயாள் துறைமுகத்தை ஞாயிற்றுக்கிழமை காலை வந்தடைந்தது. அந்தக் கப்பலில் 20,000 மெட்ரிக் டன் எல்பிஜி எரிவாயு உள்ளது. அந்தக் கப்பல் ஹோா்முஸ் நீரிணையை கடந்த 13-ஆம் தேதி கடந்தது குறிப்பிடத்தக்கது.

ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து இந்தியாவுக்கு இதுவரை 13 கப்பல்கள் வந்துள்ளன. அதில் 12 கப்பல்கள், எல்பிஜி எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல்கள் ஆகும். எஞ்சிய ஒரு கப்பல், கச்சா எண்ணெய்யை ஏற்றி வந்த கப்பலாகும்.