
நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு; 6,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை பற்றி...

நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு - கோப்புப்படம்
காத்மாண்டு: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 1,450 ஆக உயர்ந்துள்ளது, 6,000-க்கும் மேற்பட்டோரை இதுவரை காணவில்லை என நேபாளக் காவல்துறை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
நேபாளம் இன்னும் இந்த பேரிடரின் பாதிப்புகளிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது.
நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி ஏற்பட்ட பனிப்பாறை-பாறைச் சரிவு காரணமாக உருவான திடீர் வெள்ளம், வடக்கு மற்றும் மத்திய நேபாளத்தில் உள்ள நகரங்களையும் கிராமங்களையும் பேரழிவிற்குள்ளாக்கியது. இமயமலை எல்லைப் பகுதியிலிருந்து தெற்கு நோக்கிப் பாயும் போட்டிகோஷி நதி, வெள்ள நீரை அடித்துச் சென்று, வீடுகள், வாகனங்கள், சாலைகள் மற்றும் பாலங்களை அடித்துச் சென்றதுடன் நீர்மின் திட்டங்களையும் சேதப்படுத்தியது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மேலும் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 1,450 ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சித்வான் மாவட்டத்தில் 367, மேற்கு நவல்ப்ரசியில் 222, கிழக்கு நவல்ப்ரசியில் 232, நுவாகோட்டில் 203 உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. மேலும் ராசுவாவில் 236, கோர்க்காவில் 79, தாதிங்கில் 72, தனஹுவில் 38 உடல்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். இதுவரை, நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 13,784 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்திற்குப் பிறகு 6,000-க்கும் மேற்பட்டோரை இதுவரை காணவில்லை என நேபாளக் காவல்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள நீர்மின் திட்டப் பகுதிகள், ஆறுகள், இடிபாடுகள் நிறைந்த பகுதிகளில் காணாமல் போனவர்களுக்கான தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வெள்ளத்தால் சீனப் பகுதியில் 43 பேர் உயிரிழந்தனர்; அங்கு 500-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என சீன ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்; இமயமலை நாடான நேபாளம் இன்னும் இந்த பேரிடரின் பாதிப்புகளிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது.
உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது; இதுவரை மீட்கப்பட்ட மொத்த உடல்களில் சுமார் 110 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறகு மீட்கப்பட்ட பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் சிதைந்தோ அல்லது அழுகியோ காணப்படுகின்றன; சில சமயங்களில் உடலின் பாகங்கள் மட்டுமே மீட்கப்படுவதால், முகம், உடை அல்லது தனிப்பட்ட உடைமைகளைக் கொண்டு அவற்றை அடையாளம் காண்பது கடினமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுவரை, சுமார் 1,300 உடல்களிலிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரித்த பின்னர், சர்வதேச விதிகளின்படி அரசே இறுதிச் சடங்குகளை நேபாள அரசே செய்து வருதாக அதிகாரிகள் கூறினர்.
The death toll from last month's devastating flash floods in Nepal crossed 1,450 on Sunday
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








