
ரஷியா மீது 1,000 டிரோன்களை ஏவித் தாக்குதல் நடத்திய உக்ரைன்!
ரஷியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 1,000-க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.

மாஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைனின் டிரோன் தாக்குதலால் அங்கு தீப்பிடித்தது. - AP
ரஷியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தலின் இறுதிநாளான இன்று ரஷியா மீது 1,000-க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் ராணுவம் ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில், நூற்றுக்கணக்கான டிரோன்கள் ரஷியத் தலைநகரான மாஸ்கோ மீது ஏவப்பட்டுள்ளது.
ரஷியா மீது உக்ரைன் நடத்தியத் தாக்குதல்களில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தாக்குதல் இது என மாஸ்கோ நகரின் மேயர் தெரிவித்துள்ளார்.
இதில், மாஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. 2 பேர் பலியாகி, 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக உக்ரைன் தரப்பிலிருந்து உடனடியாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
ரஷியாவில் தற்போது நடைபெற்றுள்ள தேர்தல் அந்நாட்டின் முதல் போர்க்கால நாடாளுமன்றத் தேர்தலாகும். அதிபர் புதினின் கொள்கைகளுக்கு எதிராக எந்த எதிர்ப்பும் இல்லாத சூழலில் இத்தேர்தல் நடைபெறுகிறது. இது தற்போதைய அரசின் ஆதிக்கத்தை மேலும் உறுதிப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
போர் தொடங்கிய பின்னர் ரஷியாவால் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டு, முழுமையான கட்டுப்பாட்டிற்கு வராத உக்ரைனியப் பகுதிகளிலும், கடந்த 2014 ஆம் ஆண்டில் சட்டவிரோதமாக ரஷியாவுடன் இணைக்கப்பட்ட கருங்கடலின் கிரீமியா தீபகற்ப பகுதியிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பை சட்டவிரோதமானது என உக்ரைன் கண்டித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ரஷியா வாக்கெடுப்பு நடத்திய ஆக்கிரமிப்புப் பகுதிகள் உள்பட பல பகுதிகளில் உக்ரைன் 1,000-க்கும் மேற்பட்ட டிரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளது.
1,100 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷிய ராணுவம் தெரிவித்தாலும், பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
Summary
Ukraine launches an attack on Russia with 1,000 drones!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








