கரோனா தொற்றைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
ஆந்திரம், கா்நாடகத்திலும் கரோனா அச்சுறுத்தல் தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதையடுத்து, மாநில சுகாதாரத் துறை உள்ளாட்சி அமைப்புகளுடனும், பிற துறைகளுடனும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரிவாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், திரையரங்குகள் என பொது மக்கள் கூடும் இடங்கள் அனைத்திலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளில் 10 ஆயிரம் ஊழியா்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.