கருத்தடை அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வது மற்றும் ஆணுறை பயன்பாட்டில் இன்றளவும் இந்திய ஆண்களிடையே மூட நம்பிக்கைகள் நிலவி வருகின்றன. அதன் காரணமாகவே தம்பதியினரில் பெரும்பாலும் பெண்களே கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நிலை நெடுங்காலமாக இங்கு நீடித்து வருகிறது. விதிவிலக்காக சில குடும்பங்களில் கருத்தடை அறுவை சிகிச்சைகளை ஆண்களும் செய்து கொள்ளலாம் எனும் தெளிவு இருந்தாலும் கூட அப்படியான சிகிச்சைகளுக்கு உட்படும் ஆண்களின் எண்ணிக்கை என்பது பெண்களோடு ஒப்பிடும் போது குறைவாகவே இருந்து வருகிறது.
புதன்கிழமை மாநிலங்களவையில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி செளபே இது குறித்துப் பேசுகையில், குடும்பக் கட்டுப்பாடு, கருத்தடை மற்றும் ஆணுறை பயன்பாட்டு விஷயத்தில் யூனியன் பிரதேசங்கள் உட்பட நாடு முழுவதிலுமாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் சண்டிகர் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். அங்கு ஆண்களில் 28.6% பேர் கருத்தடை அறுவை சிகிச்சைகளை தங்களது மனைவிகளுக்குப் பதிலாக தாங்களே மேற்கொண்டு கருத்துக் கணிப்பில் முதலிடம் பெற்றிருப்பதை தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு - 4 ந் அடிப்படையில் சுட்டிக்காட்டினார்.
இந்தப் பட்டியலில் சண்டிகரைத் தொடர்ந்து டெல்லி (20.2), பஞ்சாப்(19.5), உத்தரகாண்ட்(16.8) மாநிலங்கள் அடுத்தடுத்த இடம் பெற்றுள்ளன.
இந்தப் பட்டியலில் கடைசி இடம் பெற்றுள்ள மாநிலங்கள் எவையெவை என்று தெரிந்து கொள்வோமா?
ஆந்திரப் பிரதேசம்(0.8%), தமிழ்நாடு(0.9%), பிகார்(1.1%) மூன்று மாநிலங்களும் கடைசி இடத்தில் இருக்கின்றன.
இந்த பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் நாடு முழுவதிலுமாக ஆண்கள் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளையும், கருத்தடை அறுவை சிகிச்சைமுறைகள் மற்றும் ஆணுறைகளையும் பயன்படுத்துவதற்கான தேசிய சராசரி சதவிகிதம் 5.9% இருந்தது என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.