‘ட்ரிமேன் சிண்ட்ரோம்’ வலி தாங்க முடியவில்லை என் கைகளை வெட்டி விடுங்கள் எனக் கதறும் வங்க தேசத்து இளைஞர்!

அபுல் பந்தரின் வித்யாசமான நோய்க்குறைபாடு நாட்டின் தலைப்புச் செய்திகளில் ஒன்றான பின், அந்நாட்டு பிரதமர்  ஷேக் ஹஸீனா, அபுல் பந்தரின் ஒட்டுமொத்த சிகிச்சை செலவுகளையும் அரசே ஏற்று நடத்தும் என உறுதி அளித்தி
‘ட்ரிமேன் சிண்ட்ரோம்’ வலி தாங்க முடியவில்லை என் கைகளை வெட்டி விடுங்கள் எனக் கதறும் வங்க தேசத்து இளைஞர்!

இந்த இளைஞரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. உலகில் மனிதர்களுக்கு எத்தனை எத்தனையோ நோய்கள் வந்து போகின்றன. ஆனால்... இப்படி ஒரு விந்தையான நோய்க்குறைபாடு உலகில் வேறு யாருக்குமே வந்து விடக்கூடாது என்று பிரார்த்திக்கத் தோன்றுகிறது. நோய் தான் வந்து விட்டதே, பிறகு வேண்டுதலில் என்ன இருக்கிறது? இனி அனுபவித்துத் தானே தீர வேண்டும் என்கிறீர்களா? ஆம், அந்த இளைஞர் வலிக்க வலிக்க அதை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார். இவரைப் பற்றி நீங்கள் முன்னமே கூட அறிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இவர் தான் வங்க தேசத்தின் ‘ட்ரீ மென்’ (மர மனிதன்) என்று அழைக்கப்படும் அபுல் பஜந்தர். வயது 28. இதுவரை இவரது கை, கால்களில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 25. அறுவை சிகிச்சைகளுக்கான காரணம் இந்த இளைஞரின் கைகளிலும், கால்களிலும் காணப்படும் அபூர்வமான எக்ஸ்ட்ரா உருப்படிகளை வெட்டி நீக்குவதற்காக. அபுலின் புகைப்படத்தைப் பார்த்தாலே அவரிடமிருக்கும் வித்யாசம் என்னவென்று எல்லோருக்குமே புரிந்திருக்கும். 

சிலருக்கு கால்களில் ஆணி வளர்ந்திருக்கு என்று சொல்லி மருத்துவரிடம் சென்று சிறு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதை வெட்டி நீக்கி விட்டு வருவார்கள். அதெல்லாம் வெளிப்படையாக கண்களுக்குத் தெரியும் அளவில் பெரிதாக இருப்பதில்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களால் உணர முடிகிற அளவுக்கு கால் பாதங்களில் தோல் அழுத்தமாக ஆணி போல இருக்கும். ஆனால் அபுலுக்கு அப்படி இல்லை. அவரை பார்க்கும் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும் வண்ணம் கைகால்களில் மரப்பட்டை போல எக்ஸ்ட்ரா சதைகள் கடினப்பட்டு வளர்ந்து தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால் கடுமையான வலி ஏற்பட்டு இரவு முழுவதும் தூங்க முடியாத அவஸ்தையில் இருக்கிறார் அவர். கடந்த முறை அபுலுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து விட்டது, பயப்பட ஒன்றுமில்லை. இனிமேல் பிரச்னை ஏதும் இல்லை என்று கூறி வீட்டுக்கு அனுப்பினார்கள். கிட்டத்தட்ட 2 வருடங்கள் மருத்துவமனை வளாகத்திக்குள்ளேயே அபுலை வைத்திருந்து ஆராய்ச்சிகள் பல செய்து கட்டக் கடைசியாக ஏதோ தீர்வு கிடைத்து அதன் அடிப்படையில் நடந்து முடிந்த அறுவை சிகிச்சை வெற்றி என்று சந்தோசத்துடன் வீடு திரும்பினார் அபுல். ஆனால், அந்த சந்தோசம் கொஞ்ச நாள் கூட நீடிக்கவில்லை. இதோ இப்போது மறுபடியும் அதே மர உருப்படிகள் முன்னை விட மிக அதிகமாக கை, கால்களில் வளரத் தொடங்கி விட்டன. 

இப்போது மருத்துவர்களிடம் அபுல் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்று தான். ‘தயவு செய்து என் கைகளை வெட்டி நீக்கி விடுங்கள். நான் வலியில் இருந்தாவது விடுதலை அடைகிறேன், என்னால் இந்த வேதனையைத் தாங்கவே முடியவில்லை, உயிர் போவது போல வலிக்கிறது. இரவெல்லாம் தூங்கவே முடியாமல் வலி நீடிக்கிறது’ என்று அவர் அரசுக்கும், மருத்துவர்களுக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார். 

அபுலின் கோரிக்கையை அவரது அம்மா அமீனா பீவியும் கூட ஆமோதிக்கிறார். அவன் வலியில் இருந்து விடுபட இது ஒன்று தான் வலி, என் மகன் நரகவேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறான். தயவு செய்து அவனது வேண்டுகோளை நிறைவேற்றுங்கள்’ என்கிறார் அமீனா.

சரி அப்படி அத்தனை கொடூரமாக அபுலைத் தாக்கியிருக்கும் அந்த நோயின் பெயர் தான் என்ன?

அபுலுக்கு வந்திருப்பது ’எபிடெர்மோடிஸ்ப்ளாசியா வெருசிஃபார்மிஸ்’ எனப்படும் மிக அரிதான மரபியல் குறைபாட்டு நோய். மருத்துவர்கள் இதை ட்ரீமேன் சிண்ட்ரோம் என்று குறிப்பிடுகிறார்கள்.

இதற்கான தரமான சிகிச்சை எடுத்துக் கொள்ள அபுல் வெளிநாடு செல்ல விரும்புகிறார். ஆனால் அதற்கான நிதி வசதி அவரிடம் இல்லை எனும் போது வேறு வழியின்றித்தான் தற்போது, வலி தாங்க இயலாமல், என் கைகளையாவது வெட்டி விடுங்களேன் என்று புலம்புகிறார். என்கிறார்கள் அபுலுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.

இந்நிலையில் நேற்று செவ்வாயன்று அபுலின் நோய்க்கான சிகிச்சைமுறைகள் குறித்து தலைநகர் டாக்காவில் இருக்கும் டாக்கா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை வளாகத்தில் திறன் வாய்ந்த 8 மருத்துவர்களின் சந்திப்பு நிகழ்த்தப்பட்டதாக கூறும் மருத்துவமனையின் தலைமை பிளாஸ்டிக் சர்ஜனான சமந்தா லால் சென், அபுலின் நம்பிக்கையிழந்த கோரிக்கையைப் பற்றிப் பேசுகையில்... 

அவர் வலி தாங்க முடியாமல் தானாகவே அப்படி ஒரு முடிவெடுத்து விட்டார். அது அவரது தனிப்பட்ட கருத்து, நாங்கள் எங்களால் முடிந்தவரையில் அவருக்கொரு நல்ல தீர்வு அளிக்கவே முயற்சித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.

அபுல் பந்தரின் வித்யாசமான நோய்க்குறைபாடு நாட்டின் தலைப்புச் செய்திகளில் ஒன்றான பின், அந்நாட்டு பிரதமர்  ஷேக் ஹஸீனா, அபுல் பந்தரின் ஒட்டுமொத்த சிகிச்சை செலவுகளையும் அரசே ஏற்று நடத்தும் என உறுதி அளித்திருக்கிறார்.

அபுல் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் அதே மருத்துவமனையில் அவருக்கு இருக்கும் அதே நோய்க்குறைபாடுகளுடன் 2017 ஆம் ஆண்டில் இளம்பெண்ணொருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கும் அபுல் போலவே அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், ஆபரேஷன் வெற்றியில் முடிந்ததாக உறுதி அளித்திருந்தனர்.

ஆனால், சில மாதங்களின் பின் நோயாளியின் பெற்றோர் ஊடகங்களுக்கு அளித்திருந்த நேர்காணலொன்றில், அறுவை சிகிச்சையினால் எங்களுக்கு தீர்வு ஏதும் கிடைத்தபாடில்லை, முன்னை விட இப்போது மிக அதிகமான மரப்பகுதிகள் கைகால்களில் வளரத் துவங்கி இருக்கின்றன. இனியும் நாங்கள் இந்த சிகிச்சையை தொடர்வதாக இல்லை. என அறிவித்து இளம்பெண்ணை அழைத்துக் கொண்டு ஊர் போய்ச் சேர்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com