தீயவைப் பொசுங்கி நல்லவைப் பூக்கும் தீபஒளி!

வடக்கே காஷ்மீருக்கும் தெற்கே கன்னியாகுமரிக்கும் இடையே பரந்து பரவியிருக்கும் நிலப்பரப்பில் மகிழ்ச்சிப் பூக்கும் நந்தவனம்தான்-தீபாவளி
Updated on
2 min read

வடக்கே காஷ்மீருக்கும் தெற்கே கன்னியாகுமரிக்கும் இடையே பரந்து பரவியிருக்கும் நிலப்பரப்பில் மகிழ்ச்சிப் பூக்கும் நந்தவனம்தான்-தீபாவளி பண்டிகை. இளையோர்-முதியோர், எளியோர்-வலியோர், ஆடவர்-பெண்டிர், நகரத்தார்-கிராமத்தார் போன்ற எவ்வித வேறுபாடும் இல்லாமல் உற்சாகப்பெருக்கோடு கொண்டாடப்படும் பண்டிகைதான் தீபாவளி.
நீரு தும்புவா ஹப்பா எனப்படும் நீர் நிரப்பும் விழா, நரகாசதுர்தஷி எனப்படும் நரகாசுரனை கிருஷ்ணபகவான் கொன்று வென்ற விழா, லட்சுமி பூஜைஎனப்படும் செல்வம் வேண்டும் விழா, பலிபாட்யமி எனப்படும் அகம்பாவம் கொண்ட அரசன் பலி சக்ரவர்த்தியை விஷ்ணுபகவான் வீழ்த்தியதை கொண்டாடும் திருநாள் என நான்குவிதமாக நான்கு நாள்களுக்கு கர்நாடகத்தில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
அஸ்வினி மாதத்தின் கடைசி மூன்றாவது நாளில் நீர் நிரப்பும் விழாவுடன் கன்னடர்கள் தீபாவளியைத் தொடங்குகின்றனர். சுண்ணாம்பு, பூவிதழ்கள், கோலமாவு கொண்டு குளியலறைகள் சுத்தம் செய்யப்படும். குளியலறையில் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் தண்ணீர் நிரப்படும். தண்ணீர் நிரம்பிய பாத்திரம் மீது விநாயகர் விக்கிரகம் வைத்து பூஜிக்கப்படும். அடுத்த 3 நாள்களுக்கான பண்டிகையின் தொடக்க விழாவாக இதை எடுத்துக்கொள்ளலாம்.
இரண்டாவது நாள், நரகாசுரனை கிருஷ்ணபகவான் வதம் செய்து கொன்றது நரகா சதுர்தஷியாக கொண்டாடப்படுகிறது. சூரியோதயத்திற்கு முன்பு எழுந்து, வீடு மற்றும் முற்றத்தை சுத்தப்படுத்தி, வாசலில் வண்ணக்கோலமிடுவார்கள். தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பார்கள்.
கங்கை நதியில் மூழ்கியதற்கு நிகரானதாக எண்ணெய் குளியல் கருதப்படுகிறது. எண்ணெய் குளியலுக்கு முன்பு வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் பாய் மீது வரிசையாக அமர்ந்திருப்பார்கள். குடும்பத் தலைவர், குடும்ப உறுப்பினர்களுக்கு எண்ணெய் சடங்குகளை செய்து, எண்ணெய் பூசிவிடுவார். உறுப்பினர்களின் நெற்றியில் திலகமிட்டு, தங்கவிரலால் எண்ணெய் எடுத்து தலை, கை,கால்களில் தடவிவிடுவார்.
எண்ணெய் குளியலுக்கு முன்பாக அனைவருக்கும் ஆரத்தி எடுக்கப்படும். மூத்தவர்களை வணங்கிவிட்டு எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வார்கள். அதன்பிறகு, புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடிப்பார்கள். தீமைகளின் உறைவிடமாக விளங்கிய கொடிய அரக்கனை வீழ்த்தி வெற்றிகொண்டதை குறிக்கும் வகையில் மாலையில் மீண்டும் பட்டாசு வெடிக்கப்படும்.
பாயாசம், எலுமிச்சைசாதம்(சித்ரன்னா), பாசிப்பயறுடன் நறுக்கிய பச்சைக்காய்கறிகள்(கோசம்பரி), கூட்டு,பொரியல்(பல்யா), போளி(ஹோலிகே), வடை(ஆமவடே)ஆகியவை படைக்கப்பட்டு, பரிமாறப்படும்.
மூன்றாம் நாள், அமாவாசை தினம். செல்வச்செழிப்பை வேண்டி லட்சுமிபூஜை செய்து கொண்டாடப்படுகிறது. புதியதொழில் மற்றும் புதிய கணக்கு தொடங்குவதற்கு, புதியவாகனம் வாங்குவதற்கு, பொதுவில் புதியன செய்வதற்கு இந்தநாள் புனித நாளாகக் கருதப்படுகிறது.
நான்காம் நாள், கார்த்திகை மாதத்தின் முதல் நாள். இந்நாள் பலிபாட்யமியாக கொண்டாடப்படுகிறது. ஆணவம் தலைக்கேறி, கர்வம் கொழுத்திருந்த பலி சக்ரவர்த்தியை வாமன அவதாரம்(குள்ள பிராமணன்)எடுத்து விஷ்ணுபகவான் அதலபாதாளத்தில் தள்ளியதை கொண்டாடுவதே பலிபாட்யமி. பலி சக்ரவர்த்தியாக சாணியைப் பிடித்துவைத்து, அதன்மீது செண்டுமல்லி செருகி பூஜை அறையில் வைத்து வணங்குவார்கள். பண்டிகையை முன்னிட்டு சுவையான உணவு பரிமாறப்படும்.
இதற்கு முன்பு பலிந்திரா பூஜைசெய்ய வேண்டும். தட்டில் அரிசியை கொட்டி,  அதில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து, அதன் மீது கலசம் வைக்க வேண்டும். கலசத்தின் முன்பு கிருஷ்ணபகவானின் விக்கிரகம் வைத்து பூஜிக்க வேண்டும். தீபாவளியின் இறுதிநாளான பலிபாட்யமி அன்று வானம் வண்ணவண்ண வெடிகளின் வசப்படும்.
வானத்தில் மின்னும் வானவேடிக்கைகள் சிறுவர் உள்ளிட்ட அனைவரையும் கவரும். இல்லத்தின் மூலைமுடுக்குகளில் வைக்கப்பட்டிருக்கும் அகல்விளக்குகளில் இருந்து ஒளிவெள்ளம் பாய்ந்து, பரவி படரும்.
நல்லிணக்க தீபாவளி கர்நாடகத்தில் தீபாவளி உற்சாகம் பொங்க கொண்டாடப்படுகிறது. அண்மைகாலமாக ஜாதி, மதம் போன்ற பேதங்கள் மறந்து நல்லிணக்கம் பேணும் இன்பம் பூக்கும் விழாவாக தீபாவளி மாறிவருவது சமூகத்தின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
அல்லவை நீக்கி நல்லவை சேர்ப்பதும், தீமையை போக்கி நன்மையை நிலைநிறுத்துவதும் தீபாவளி பண்டிகையில் இழையோடும் அரிய தத்துவம். அன்பும், பண்பும் பறைச்சாற்றும் மகிழ்ச்சிப்பூக்கும் இன்ப வானமன்றோ தீபாவளி.
வட இந்திய இந்துக்கள் கர்நாடகத்தில் 5 நாள்கள் தீபாவளியை கொண்டாடுகினறனர். முதல் நாள் தந்தேராஸ், இரண்டாம் நாள் சோட்டி தீபாவளி, மூன்றாம் நாள் லட்சுமி பூஜை, நான்காம் நாள் பலிபாடமி, ஐந்தாம் நாள் பைதுஜ் பூஜையை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
சமணர்கள் 3நாள் தீபாவளியை கொண்டாடுகின்றனர். 3 நாளும்  மகாவீரரின் இறுதி உரையான உத்தரதைவா சூத்திரத்தை கூறி வணங்குகின்றனர். 24-வது தீர்த்தங்கரா உடமைகளை கலைந்து துறவு பூண்டு மகாவீரர் தினமாக அமாவாசையன்று தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com