மத்திய அரசு தலையிட வேண்டும்: ஆளுநரிடம் விவசாயிகள் மனு

மகதாயி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி, ஊர்வலமாகச் சென்று கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் வட கர்நாடக விவசாயிகள் மனு அளித்தனர்.
Updated on
1 min read

மகதாயி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தி, ஊர்வலமாகச் சென்று கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் வட கர்நாடக விவசாயிகள் மனு அளித்தனர்.
வீரேஷ் சொரபதமட்டா, சங்கரப்பா அம்பலி, ஆனந்தகுருஜி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து புதன்கிழமை ஊர்வலமாகச் சென்று சேஷாத்ரிபுரம், ரேஸ்கோர்ஸ்சாலை வழியாக சாளுக்கியா சதுக்கத்தை அடைந்தனர். 
அப்போது, ஆளுநர் மாளிகைக்கு செல்ல முயன்ற விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால், ஆளுநரைச் சந்தித்து மனு அளிக்க ஐந்து பேருக்கு வாய்ப்பளிப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, வீரேஷ் சொரபதமட்டா உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் கொண்ட குழுவினர் ஆளுநர் மாளிகைக்கு நடந்து சென்றனர். 
அங்கு ஆளுநர் வஜுபாய் வாலாவைச் சந்தித்து மகதாயி பிரச்னையைத் தீர்க்க பிரதமர் மோடி தலையிட வலியுறுத்தி மனு அளித்தனர். கர்நாடகத்தில் உள்ள தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மாநிலக் கட்சியான மஜத ஆகிய அரசியல் கட்சிகள் மகதாயி ஆற்றுநீர்ப் பங்கீட்டு விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
எனவே, அரசியல் கட்சிகள் மீதான நம்பிக்கையை நாங்கள் இழந்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, கர்நாடகம், மகாராஷ்டிரம், கோவா மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். வட கர்நாடக மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற அரசியல் சார்பில்லாமல் முயற்சி மேற்கொள்ள வேண்டும். வட கர்நாடக மக்களுக்கு நியாயம் கிடைக்க மத்திய அரசு தலையிட வேண்டும் என்று அந்த மனுவில் விவசாயிகள் குறிப்பிட்டிருந்தனர். இந்த விவகாரத்தில் ஆளுநர் பங்காற்றவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆளுநர் வஜுபாய் வாலா, மத்திய அரசிடம் பேசி பிரச்னைக்குத் தீர்வுகாண முயற்சிப்பதாக தெரிவித்தார்.
இதனிடையே, விவசாயிகள் குழுவுடன் தன்னையும் அனுமதிக்கும்படி கர்நாடக ரக்ஷனவேதிகே (பிரவீண்ஷெட்டி அணி) தலைவர் பிரவீண் ஷெட்டி விடுத்த கோரிக்கையை போலீஸார் ஏற்காததால், அதை கண்டித்து ஆளுநர் மாளிகை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com