பின்தங்கியுள்ள தலித் மக்களை மேம்படுத்த பாஜக பாடுபடும் என அக் கட்சியின் மாநில தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளி மாவட்டம், கர்கி பசவேஸ்வராநகரில் வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த தலித் சமுதாய மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியது:
பிரதமர் நரேந்திர மோடி உலகமே அதிசயிக்கும் வகையில் ஆட்சி செய்து வருகிறார். அவரது தலைமையில் பின்தங்கியுள்ள தலித் சமுதாய மக்களை மேம்படுத்த பாஜக முயற்சி மேற்கொண்டுள்ளது. மாநிலத்தில் ஆளும் கங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்ப அனைத்து சமுதாய மக்களும் முடிவு செய்துள்ளனர்.
என்மீது ஆளும் கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது. அதுதொடர்பான விசாரணைக்குத் தயாராக உள்ளேன். ஆளும் கட்சியின் தோல்வியால் வேதனையடைந்துள்ள மக்கள், தேர்தலில் பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளனர்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 150 தொகுதிகளில் வெற்றி பெறும். காங்கிரஸ் ஆட்சியில் தலித் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தலித் வீடுகளுக்குச் சென்று பாஜக உணவருந்துவை அக்கட்சியினர் கிண்டல் செய்து வருகின்றனர். என்றாலும், சமூக நீதியைக் காக்க தலித் வீடுகளுக்கு சென்று உணவருந்துவதை நாங்கள் தொடருவோம் என்றார்.
பேட்டியின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.