வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படும் என்று சங்கீதா மொபைல்ஸ் மேலாண் இயக்குனர் சுபாஷ் சந்திரா தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை ஏவியேட்டர் ஏர் ரெஸ்க்யூ குழுமத்துடன் புரிந்துணர்வு செய்து கொண்ட பின்னர் அவர் பேசியது: வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள குழுமங்களில் ஒன்றாக சங்கீதா மொபைல்ஸ் விளங்குகிறது. உயர் வாடிக்கையாளர்களின் பங்களிப்பு சிறந்து விளங்குகிறது. எனவே அவர்களின் செல்லிடப்பேசிகளுக்கு மட்டுமின்றி, அவர்களின் உயிரைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுப்பதில் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். அதன்படி ஏவியேட்டர் ஏர் ரெஸ்க்யூ குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட அவசர சிகிச்சைகளின் போது உரிய நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்காக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக வாடிக்கையாளர்கள் எந்த கட்டணத்தையும் வழங்கத் தேவையில்லை. எங்கள் வர்த்தகத்தில் கிடைக்கும் லாபத்தில் இந்தச் சேவையை இலவசமாக செய்யத் திட்டமிட்டுள்ளோம். சாதாரணமாக, ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவைக்கு 1 மணி நேரத்துக்கு ரூ. 1 லட்சம் கட்டணம் வசூலிக்கபடுகிறது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், ஏவியேட்டர் ஏர் ரெஸ்க்யூ மேலாண் இயக்குநர் அருண் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.