வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: தமிழர்களை குறிவைக்கும் காங்கிரஸ்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை கவர்வதற்காக காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.

Updated On :7 அக்டோபர் 2017, 9:04 pm

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை கவர்வதற்காக காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள காங்கிரசும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜக மற்றும் மஜத கவனம் செலுத்தி வருகின்றன.
பெங்களூருவா? எங்களூருவா?
224 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவைப்படுகின்றன. எனவே, 113 இடங்களைக் கைப்பற்றும் வல்லமையை பெற அனைத்துக் கட்சிகளும் முயன்று வருகின்றன. கர்நாடகத்தில் இருக்கும் மாவட்டங்களில் பாகல்கோட்டில் 7, பெங்களூரு ஊரகத்தில் 4, பெலகாவியில் 18, பெல்லாரியில் 9, பீதரில் 6, விஜயபுராவில் 8, சாமராஜ்நகரில் 5, சிக்பளாப்பூரில் 5, சிக்மகளூருவில் 5, சித்ரதுர்காவில் 6, தென் கன்னடத்தில் 8, தாவணகெரேயில் 8, தார்வாடில் 7, கதக்கில் 4, கலபுர்கியில் 9, ஹாசனில் 7, ஹாவேரியில் 6, குடகுவில் 2, கோலாரில் 6, கொப்பளில் 5, மண்டியாவில் 7, மைசூருவில் 12, ராய்ச்சூருவில் 7, ராமநகரில் 4, சிமோகாவில் 7, தும்கூருவில் 11, உடுப்பியில் 5, வடகன்னடத்தில் 6, யாதகிரியில் 4, பெங்களூரு நகரத்தில் 7, பெங்களூரு மாநகராட்சியில் 21 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. பெங்களூரு நகரம் மற்றும் பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் அதிகபட்சமாக 28 தொகுதிகள் உள்ளன.
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 28-இல் 14 இடங்களை காங்கிரசும், 11 இடங்களை பாஜகவும், 3 இடங்களை மஜதவும் கைப்பற்றின. கர்நாடகத்தில் அதிகபட்சமாக 28 தொகுதிகளை (12.5 சதவீதம்) கொண்டுள்ள பெங்களூரில் 20-க்கும் அதிகமான இடங்களைக் கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. எனவே, பெங்களூருவை தங்களூருவாக்க காங்கிரஸ் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.
தமிழர்களுக்கு வலைவீச்சு:
பெங்களூரில் கன்னடர்களுக்கு அடுத்தபடியாக, அதிகமக்கள் தொகை சமூகமாக தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். 17 தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் அளவுக்கு பெரும்பான்மையினராக வாழ்ந்து வருவதால், தமிழர்களின் ஆதரவை பெறுவதற்காக காங்கிரஸ் வியூகம் அமைத்து வருகிறது.
தமிழர் அரசியல்
பெங்களுரில் மட்டுமல்லாமல் மைசூரு, மண்டியா, கோலார், தாவணகெரே, தென் கன்னடம், சிமோகா, சிக்பளாப்பூர்,தும்கூரு, சாமராஜ்நகர், பெங்களூரு ஊரகம், ராமநகரம் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் ஆதரவை பெறவும் திட்டமிட்டுள்ள காங்கிரஸ், அதற்காக தமிழர்களை திருப்திப்படுத்த பலமுனைகளில் முயற்சிக்கத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கற்ற பாடம்
பெங்களூரு மாநகராட்சித் தேர்தலில் அடைந்த தோல்வியால் காங்கிரஸ் கட்சியினர் பாடம் கற்கவில்லை. பாஜகவுக்கு வாக்களித்து விட்டதால் தமிழர்களை காங்கிரஸ் புறக்கணிக்கத் தொடங்கியது. இதனிடையே, 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவில் இருந்து பிரிந்து கர்நாடக ஜனதா கட்சியை தொடங்கியிருந்த எடியூரப்பாவுக்கே தமிழர்கள் வாக்களித்தனர். 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் தமிழர்கள் பாஜகவை ஆதரித்தனர். இதனால் சட்டப்பேரவை தேர்தலில் மட்டுமல்ல, சட்டமேலவை, பெங்களூரு மாநகராட்சி தேர்தல்களிலும் தமிழர்களை வேட்பாளராக்க காங்கிரஸ் தயங்கியது.
தமிழர்களின் ஆதரவு இல்லாததால் தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ள காங்கிரஸ், தற்போது தமிழர்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கும் காலம் கனிந்துள்ளது.
தமிழர் 'வாக்கு'
பெங்களூரில் வாழ்ந்து வரும் தமிழர்களில் ஏராளமானோர் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக பங்காற்றி வந்தனர். தமிழர்களான எம்.ஏ.அமலோற்பவம், எம்.முனுசாமி எம்.எல்.ஏ.க்களாகவும், வி.எஸ்.கிருஷ்ண ஐயர் சட்டமேலவை துணைத் தலைவராகவும், எம்.சி.பெருமாள் மேலவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளனர். அதேபோல, பெங்களூரு மாநகராட்சி மேயர்களாக என்.கேசவ ஐயங்கார்(1950), வி.எஸ்.கிருஷ்ண ஐயர்(1962), ஜி.குப்புசாமி(1994-1995)ஆகியோர் பதவி வகித்துள்ளனர். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியில் தமிழர்கள் தலைவர்களாக, முக்கியப் பதவிகளை வகிப்பவர்களாக வளர முடியாத நிலை உருவாகிவிட்டது.
இதுபோன்ற பல தவறுகளால் தமிழர்களிடம் இருந்து விலகி சென்ற காங்கிரஸ், மீண்டும் தமிழர்களை அரவணைத்து, அவர்களின் வாக்கை பெற துடியாய் துடித்து வருகிறது.
இதன் முதல்கட்டமாக, கர்நாடக காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை கவனிக்கும் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளோரில் ஒருவராக தமிழரான மாணிக் தாக்கூர் இடம்பெற்றுள்ளார். இதன் அடுத்தகட்டமாக, பெங்களூரு மாநகராட்சி மேயராக ஆர்.சம்பத்ராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுபோன்று தமிழர்களின் வாக்குகளை பெற காங்கிரஸ் வியூகம் அமைத்துள்ளது. இதற்கு பலன் கிடைக்குமா என்பதை சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.