யக்ஷகானா, தெருக்கூத்து சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபடுவதற்காக கர்நாடக யக்ஷகானா தெருக்கூத்து அகாதெமி நிதியுதவி வழங்குகிறது.
இதுகுறித்து கர்நாடக யக்ஷகானா தெருக்கூத்து அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடக யக்ஷகானா தெருக்கூத்து அகாதெமி சார்பில் 2017-18-ஆம் ஆண்டுக்கான சிறப்புத்திட்டம் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு துணைத் திட்டத்தில் நாட்டுப்புறக்கலை சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக யக்ஷகானா மற்றும் தெருக்கூத்து போன்ற நாட்டுப்புறக் கலையின் தொன்மை, பன்மை, வளமை குறித்து ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஆர்வமுள்ள மாணவர்கள் அல்லது நாட்டுப்புறக்கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 5 மாதங்கள் நடக்க வேண்டிய ஆய்வுப்பணிக்கு நிதிஉதவி அளிக்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 9-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். பழங்குடியினர் சமுதாயத்தினர் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 45 வயதுக்குள்பட்டவராக இருக்க வேண்டும். இதற்கான உறுதிச் சான்றிதழை அளிக்க வேண்டும்.
யக்ஷகானா மற்றும் தெருக்கூத்து குறித்து ஆய்வு மெற்கொள்ள விண்ணப்பிப்போர் கன்னடமொழி,மொழி அறிவியல், நாட்டுப்புறக்கலை, சமூகவியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், மகளிர் ஆய்வு, வரலாறு, இலக்கியவரலாறு, மனிதகுலவரலாறு, இதழியல், நூலகவியல், தகவல்தொழில்நுட்பம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் மற்றும் எம்பி அல்லது பிஎச்.டி படித்திருக்க வேண்டியது கட்டாயமாகும். நேர்காணல் மூலம் ஆராய்ச்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த ஆய்வுப்பணியில் ஈடுபட ரூ.ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஆய்வுப் பணியின்முடிவில் 100 பக்கங்களுக்கு குறையாமல் ஆய்வறிக்கையை அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பெங்களூரு,ஜே.சி.சாலை, கன்னட மாளிகையில் உள்ள கர்நாடக யக்ஷகானா தெருக்கூத்து அகாதெமியின் பதிவாளரை நேரில் அல்லது 080-22113146 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.