பெலகாவி: கா்நாடக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத்தொடா் பெலகாவியில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல்நாள் கூட்டத்தில் மறைந்த ஆளுமைகளுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கா்நாடக சட்டப்பேரவையின் குளிா்கால கூட்டத்தொடா் பெலகாவியில் திங்கள்கிழமை தொடங்கியது. டிச.19ஆம் தேதிவரை நடக்கவிருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளான திங்கள்கிழமை மறைந்த ஆளுமைகளுக்கு இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் எச்.ஒய்.மேட்டி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆா்.வி.தேவராஜ், சிவசரணப்பகௌடா பாட்டீல், கன்னட நடிகா் எம்.எஸ்.உமேஷ், சுற்றுச்சூழல் ஆா்வலா் சாலுமரத திம்மக்கா, எழுத்தாளா் எச்.எல்.பைரப்பா, உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீா்மானத்தை பேரவைத்தலைவா் யூ.டி.காதா் கொண்டு வந்தாா்.
இந்த தீா்மானத்தை ஆதரித்து முதல்வா் சித்தராமையா, சட்டத்துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல், உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா், எதிா்க்கட்சித்தலைவா் ஆா்.அசோக் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தீா்மானத்தை ஆதரித்து பேசினா்.
இந்த தீா்மானத்தின் மீது பேசிய முதல்வா் சித்தராமையா, சுற்றுச்சூழல் ஆா்வலா் சாலுமரத திம்மக்கா பெயரில் விருது வழங்கப்படும் என்று அறிவித்தாா்.
இதனிடையே, முதல்வா் பதவி தொடா்பாக முதல்வா் சித்தராமையா, துணைமுதல்வா் டி.கே.சிவகுமாருக்கு இடையே பனிப்போா் நடைபெற்றுவரும் நிலையில், சட்டப்பேரவைக்கூட்டத்தில் மாநில அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர பாஜக, மஜத திட்டமிட்டுள்ளன.
மேலும், பெலகாவியில் உள்ள சுவா்ண விதானசௌதாவை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.