கர்நாடகத்தில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையின்போது நாடுமுழுவதும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், தனது உத்தரவில் சிறுமாற்றத்தை செய்த உச்ச நீதிமன்றம், ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம், அது எந்த நேரம் என்பதை மாநில அரசே தீர்மானித்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க கர்நாடகத்தில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டும் பட்டாசு வெடிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
நவ. 5 முதல் 8-ஆம் தேதிவரை 4 நாள்களுக்கு மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும் அந்த உத்தரவில் கர்நாடக அரசு கூறியுள்ளது.
பட்டாசு வெடிக்கும் நாள்கள் மற்றும் நேரத்தை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கிணங்க தீவிரமாக அமல்படுத்துமாறு உள்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதியை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கையை எடுக்குமாறு காவல் துறைக்கு உள்துறை வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
கர்நாடகத்தில் சரவெடிகளைத் தயாரிக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் கர்நாடக அரசு தடைவிதித்துள்ளது. மேலும் பட்டாசு வெடிப்பதன் தீயவிளைவுகளை பொதுமக்கள், குறிப்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முன்பு 7 நாள்கள், பின்பு 7 நாள்கள் ஆக மொத்தம்14 நாள்கள் பட்டாசுவெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு அளவை கண்காணிக்குமாறு கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொது இடத்தில் வைத்து கூட்டு பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாட பொதுமக்களை ஊக்குவிக்குமாறு அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







