/

ஆடியோ விவகாரம்: சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிர்ப்பு: 2-ஆவது நாளாக கர்நாடக அவைகளில் பாஜக அமளி

மஜத எம்எல்ஏவை பாஜகவில் சேர்க்க எடியூரப்பா பேரம் பேசியதாக வெளியான தொலைபேசி உரையாடல் தொடர்பாக சிறப்பு

Updated On :13 பிப்ரவரி 2019, 10:32 am IST

மஜத எம்எல்ஏவை பாஜகவில் சேர்க்க எடியூரப்பா பேரம் பேசியதாக வெளியான தொலைபேசி உரையாடல் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட பாஜகவினர் எதிர்ப்புத் தெரிவித்து, மேலவை, பேரவையில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும்  அமளியில் ஈடுபட்டனர்.
மஜத எம்எல்ஏ நாகன கெளடாவை பாஜகவில் சேர்க்க அவரது மகன் சரண் கெளடாவுடன் எடியூரப்பா பேரம் பேசியதற்கான ஒலிப்பதிவுத் துணுக்கை முதல்வர் குமாரசாமி பிப்.8-ஆம் தேதி வெளியிட்டார்.  இது கர்நாடக அரசியலில் மட்டுமல்லாது, இந்திய அரசியலில் பெரும் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது. 
மேலும்,  மஜத எம்எல்ஏ நாகன கெளடாவின் மகன் சரண் கெளடாவுடன் பாஜக எம்எல்ஏ சிவன கெளடா நாயக் நடத்திய பேச்சுவார்த்தையின் போது," நீங்கள்(மஜத எம்எல்ஏ)பதவியை ராஜிநாமா செய்தால்,  அதை பேரவைத் தலைவர் வாங்க மாட்டார் என்று அஞ்ச வேண்டாம்.  பேரவைத் தலைவரிடம் ரூ.50கோடி பேரம் நடத்தப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டிருந்தாராம். 
இந்த விவகாரம் கர்நாடக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை எதிரொலித்தது.  இதுதொடர்பாக பேரவைத் தலைவர் ரமேஷ்குமார்,  இந்த விவகாரத்தில் தனக்கு அவமரியாதை ஏற்பட்டுள்ளது.  எனவே,  உரிமை மீறல் பிரச்னையைக் கொண்டு வருகிறேன் என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக இரு அவைகளிலும் பாஜக, காங்கிரஸ், மஜத உறுப்பினர்கள் விரிவாக விவாதம் நடத்தினர்.  
இதனையடுத்து, ஆடியோ விசாரணை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைப்பது என முடிவானது.  இந்த நிலையில், 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவை, மேலவை கூடியவுடன் பாஜகவினர் ஆடியோ விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவாதம் நடத்தினர்.  
இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.