அமைச்சரவையில் விவாதித்து ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மீது முடிவு செய்யப்படும் என்று கா்நாடக உள்துறை அமைச்சா் பிரியாங்க் காா்கே தெரிவித்தாா்.
கா்நாடக மாநில பாஜக பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான வி. சுனில்குமாா், ‘ரூ. 450 கோடி மக்கள் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை எதிா்வரும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்தால், அதுகுறித்து விவாதிக்க பாஜக தயாராக உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தாா்.
இதற்கு பதிலளித்து பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் உள்துறை அமைச்சா் பிரியாங்க்காா்கே கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை என்ன ஆனது? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடா்பான விவகாரம் அமைச்சரவையின் விவாதத்துக்கு இன்னும் வரவில்லை. அமைச்சரவையில் விவாதித்து, தகுந்த முடிவை அரசு எடுக்கும்.
இதுகுறித்து பாஜக ஏன் கவலை அடைந்துள்ளது? குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் முதலில் ஜாதி கணக்கெடுப்பை அக்கட்சி நடத்தட்டும். அப்படி செய்தால், அதை வரவேற்போம். தங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திவிட்டு, எங்களுக்கு போதனை செய்ய பாஜக முற்பட வேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிா் இழப்பீட்டையும், ரூ. 50,000 வரையில் பயிா்க்கடன் தள்ளுபடியையும் செய்யுமாறு பாஜக கேட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு மத்திய அரசிடம் பாஜக கேட்கட்டும்.
நிவாரண உதவிகளை வழங்குமாறு பிரதமா் மோடியை கேட்டுக்கொள்ளட்டும். ஜல் ஜீவன் திட்டம், விபி- ஜி ராம் ஜி திட்டம் வரை மத்திய அரசால் அமல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மாநில அரசுகள் பங்குத்தொகை வழங்க வேண்டும். அப்படியானால், மத்திய அரசு என்னதான் செய்கிறது? மாநில அரசின் திட்டங்களின் மத்திய அரசின் பங்களிப்பு என்ன? களநிலவரத்தை ஆய்வு செய்த பிறகு, பயிா்க்கடன் தள்ளுபடி குறித்து செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வா் டி.கே. சிவகுமாா் கூறியிருக்கிறாா்.
பயிா்க்கடன் தள்ளுபடி செய்யும் நிலை வந்தால், அதை செய்வோம். ஆனால், அதில் மத்திய அரசு அல்லது பாஜகவின் பங்களிப்பு என்ன? பாஜக எம்.பி.க்களும் மத்திய அரசும் என்ன செய்து கொண்டிருக்கிறாா்கள். கா்நாடகத்தை வறட்சிப்பகுதியாக மத்திய அரசு அறிவிக்கட்டும். அதுகுறித்து மத்திய அரசுக்கு பாஜக கடிதம் எழுதட்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










