பெங்களூரு : பெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேட்டில் கர்நாடக ஆளுங்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான அரசு ஈடுபட்டதாக பாஜக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது.
இந்த முறைகேட்டின் பயனாக காங்கிரஸ் அரசுக்கு தனியார் ஒப்பந்ததாரர் தரப்பிலிருந்து ரூ. 10,000 கோடி கிடைத்திருப்பதாகவும் பாஜக சுமத்தியுள்ள குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கர்நாடக ஆளுநரிடம் அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோகா புகார் அளித்துள்ளார். அதில், கழிவுகள் மேலாண்மை டெண்டரில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றி விசாரணை கோரியுள்ளார். இதற்கான டெண்டர் குறிப்பிட்டதொரு தனியார் ஒப்பந்ததாரரிடம் மட்டுமே அடுத்த 35 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட்டதாகவும் அதிலும் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் விதத்தில் அதிக விலைக்கு அந்நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து, பெங்களூரில் செய்தியாளர்களுடன் பேசிய அசோகா, “இந்தியாவின் வரலாற்றில் குப்பைகளின் பெயரில் ரூ. 35,000 கோடியில் மிகப்பெரும் கொள்ளை நடைபெற்றுள்ளது. இது, உயர் நிலை கருப்பு - பண டெண்டர் முறைகேடாகும்” என்றார். மேற்குறிப்பிட்ட, முறைகேட்டுப் புகார் தொடர்பான ஆவணங்களையும் அவர் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், அவர் கூறும்போது, “பெங்களூரு மாநகரில் 30 ஆண்டுகளுக்கு கழிவு மேலாண்மை செயல்முறைகளை மேற்கொள்ளும் பணிகளைச் செய்ய தில்லியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திடம் டெண்டர் பெற்றுள்ளது. அந்நிறுவனத்துக்கு அத்துடன் மேலும் ஐந்தாண்டுகள் கூடுதலாகவும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மொத்தம் 35 ஆண்டுகளுக்கு பெங்களூரில் கழிவு மேலாண்மைப் பணிகள் ஒரேயொரு தனியார் நிறுவனம் வசம் அரசால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சி ஆண்டுதோறும் குப்பைகள் அள்ளுதல் மற்றும் அது தொடர்பான கழிவு மேலாண்மை பணிகளுக்காகவும் அவற்றுக்கான போக்குவரத்துக்காவும் தற்போது ரூ. 514 கோடி செலவு செய்வதுடன், கழிவுகளை தரம் பிரித்தல் மற்றும் முறையாக வெளியேற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ. 380 கோடியும், இது சம்பந்தப்பட்ட பணியில் ஈடுபடும் சுமார் 11,000 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதல் உள்ளிட்டவைகளுக்காக ரூ. 444 கோடியும் செலவிடுகிறது. மொத்த செலவு ரூ. 1,344 கோடியாகும்.
இந்நிலையில், பெங்களூரு பெருநகர பகுதி (ஜிபிஏ)-இல் மேற்குறிப்பிடப்பட்ட பணிகளில் இதுவரை உள்ளூர் கழிவுகள் மேலாண்மை ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்ட நிலையில், புதிதாக ரூ. 39,000 கோடிக்கு இன்னொரு தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்தப் புதிய டெண்டரின்கீழ், அரசுக்கு கூடுதல் நிதிச்சுமையாக ரூ. 33,320 கோடி ஏற்படும்” என்றார்.
Summary
BJP alleges Rs 39,000 cr garbage scam in Bengaluru
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










