டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சிறப்பு பள்ளிகளுக்கு நிதியுதவி நிறுத்தம்: 17 ஆயிரம் சிறார் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும் அபாயம்

சென்னை, செப். 15:   தேசிய சிறார் தொழிலாளர் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பயிலும் 17 ஆயிரம் சிறார் தொழிலாளர்கள் மீண்டும் வே

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:42 pm

வி.தேவதாசன்

சென்னை, செப். 15:   தேசிய சிறார் தொழிலாளர் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நடத்தப்படும் சிறப்பு பள்ளிகளுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு பயிலும் 17 ஆயிரம் சிறார் தொழிலாளர்கள் மீண்டும் வேலை தேடிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

  சிறார் தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய சிறார் தொழிலாளர் திட்டம் கடந்த 15 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் சிறார் தொழிலாளர்களுக்கான சிறப்பு பள்ளிகள் நடத்தப்படுகின்றன.

  பள்ளிப் படிப்பை பாதியில் விட்டவர்கள், பள்ளிக்கு செல்லாத சிறுவர்கள் பல்வேறு நிறுவனங்களில் சிறார் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். அவர்களில் 8 வயது முதல் 14 வயது வரை உள்ளவர்களை மீட்டு, சிறப்பு பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

  வழக்கமான பள்ளிகளில் சென்று பயில்வதற்கான தகுதியையும், அதற்கான மன நிலையையும் சிறார் தொழிலாளர்களிடம் ஏற்படுத்துவதே சிறப்பு பள்ளிகளின் பிரதானப் பணியாகும்.

  தமிழகத்தில் சென்னை, கோவை, விருதுநகர், தேனி, தருமபுரி உள்பட 17 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பள்ளிகளில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயில்கின்றனர்.

  ஒவ்வொரு பள்ளியிலும் 3 ஆசிரியர்கள், ஒரு சமையலர் என மொத்தம் 1,848 பேர் பணிபுரிகின்றனர். ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.1,500, சமையலர்களுக்கு ரூ.800 வீதம் மதிப்பூதியம் அளிக்கப்படுகிறது.

  மாணவர்களுக்கு மாதம் ரூ.100 ஊக்கத் தொகையும், தினமும் மதிய உணவும் வழங்கப்படுகிறது. உணவுக்காக ஒரு மாணவருக்கு நாளொன்றுக்கு ரூ.5 வீதம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட இத்தொகை உயர்த்தப்படவில்லை. இந்த நிதியைக் கொண்டே மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணவு வழங்கி வருகின்றனர். வாரத்துக்கு 3 முறை முட்டையும் வழங்கப்படுகிறது.

  இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் நடத்தப்படும் அப்பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்குவது 4 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. உணவு, ஊதியத்துக்கான அனைத்து உதவிகளும் கிடைக்காமல் ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர்.

  நிதியுதவி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பல ஆசிரியர்கள் தனியாரிடத்தில் வட்டிக்கு கடன் வாங்கி கூட பள்ளிகளை நடத்துவதாகவும், ஆனால் நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தளர்வதால் பள்ளிகள் மூடப்படுவது தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

  இதனால் பணியிடங்களிலிருந்து மீட்டு வரப்பட்ட 17 ஆயிரம் சிறார் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கே செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  இத்திட்டம் மத்திய அரசின் திட்டமாகும். மாநில திட்ட ஒருங்கிணைப்பாளராக, மாநில தொழிலாளர் ஆணையர் உள்ளார். ஆனால் அப்பள்ளிகளின் நிலை குறித்து மாநில தொழிலாளர் துறை உரிய கவனம் செலுத்தவில்லை என ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

  இது குறித்து மாநில தொழிலாளர் ஆணையர் சுகுமாரனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

  இத்திட்டத்திற்கான நிதி மத்திய அரசிடமிருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்படுகிறது. சிறப்பு பள்ளிகளுக்கு நிதியுதவி கிடைக்காதது குறித்து அண்மையில்தான் எங்கள் கவனத்துக்கு வந்தது. இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். விரைவில் நிதியுதவி கிடைக்கும் என்றார்.  இது மத்திய அரசின் திட்டமாக இருந்தபோதிலும், திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி, சிறார் தொழிலாளர் முறையை அகற்றுவது மாநில அரசின் கடமை. ஆனால் மாநில அரசு உரிய கவனம் செலுத்தாததால், சிறார் தொழிலாளர்கள் சிறப்பு பள்ளிகளிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில அரசின் சார்பில் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும் என கடந்த 9.7.2009-ல் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அத்தொகையும் இதுவரை வழங்கப்படாததால், ஆசிரியர்கள் சோர்வு அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.