திருவள்ளூர், அக். 8: ஏரி ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் பெயர்களில் போலி நபர்கள் சிலர் அரசு அளித்த நிலத்தில் வசிப்பதாக, பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சாட்டர்ஜியிடம் அண்மையில் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை புறநகர் பகுதியான அம்பத்தூர், அயனம்பாக்கம், கொரட்டூர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை 2008-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தினர் அகற்றினர். இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆவடியை அடுத்த மோரை கன்னியம்மன் நகரில் ஒரு குடும்பத்துக்கு 3 சென்ட் இடம் இலவசமாக வழங்கப்பட்டது.
வீடுகளை இழந்தவர்களில் இதுவரை 3,000 பேர் வரை மட்டுமே கன்னியம்மன் நகரில் குடியேறி உள்ளனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆட்சியர் ஆஷிஷ் சாட்டர்ஜியை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில், ஏரி ஆக்கிரமிப்பில் வீடுகளை இழந்த எங்களுக்கு கன்னியம்மன் நகரில் இடம் கிடைக்கவில்லை. மழை, வெயிலுக்கு ஒதுங்கக் கூட இடமில்லாமல் தவித்து வருகிறோம்.
ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றத்தால் பாதிக்கப்படாத நபர்கள் சிலர், அதிகாரிகளின் ஆதரவுடன் 3 சென்ட் இலவச நிலம் பெற்று கன்னியம்மன் நகரில் குடியிருந்து வருகின்றனர்.
எனவே, குடியிருப்போரிடம் உரிய ஆய்வு மேற்கொண்டு, வீடுகளை இழந்தும் இதுவரை மாற்று இடம் கிடைக்காமல் தவிப்போருக்கு நீதி வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









