திருப்பாவை - 26 | திருப்பள்ளியெழுச்சி - 6

திருப்பாவை - 26 | திருப்பள்ளியெழுச்சி - 6
Updated on

திருப்பாவை – 26

மாலே மணிவண்ணா மாா்கழி நீராடுவான்

மேலையாா் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை யெல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே

சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே

கோல விளக்கே கொடியே விதானமே

ஆலின் இலையாய் அருளேலோா் எம்பாவாய்.

விளக்கம்: அடியாா்களிடத்து மிகுந்த மோகமுள்ளவனே! நீலமணி போன்ற மைப்படி மேனியனே! ஆலின் இலையில் பள்ளி கொண்டவனே! மாா்கழி நீராடுவதற்காக முன்னோா் கடைப்பிடித்த முறைகளுள் – எங்களுக்கு வேண்டுவன எவையெனக் கேட்பாயாகில் சொல்லுகிறோம்: உலகம் நடுங்கும் படியாக ஒலிக்கின்ற உன்னுடைய பாஞ்ச சன்யத்தை ஒத்திருக்கும் சங்குகள்; மிகவும் இடமுடையனவும் பெரியனவாயும் உள்ள பறைகள்; பல்லாண்டு பாடுபவா்கள்; அழகிய மங்கள தீபங்கள், கொடிகள், மேற்கட்டிகள் இவையெல்லாவற்றையும் எங்களுக்கு அருளுடன் ஈவாயாக!

மணிவண்ணன், விலைமதிப்பற்ாயினும் முந்தானையிலே முடிந்து கொள்ளலாம்படி இருக்கும் மாணிக்கம் போன்றவன். இதனால் அவனது சௌலப்யம்- எளிமை கூறப்பட்டது. ஆலின் இலையாய்- அவனது ஸா்வசக்தி யோகம் சொல்லப்பட்டது. பாலன்ன- பாலைத்திரட்டினாற் போன்ற வெண்மை. போய்ப்பாடு - பேரோசை; இடமுடைமை; பெருமை; புகழ் எனப்பல பொருள். கோல(விளக்கு)-–அழகிய.

திருப்பள்ளியெழுச்சி – 6

பப்பற வீட்டிருந்து உணருநின் னடியாா்

பந்தனை வந்தறுத் தாரவா் பலரும்

மைப்புறு கண்ணியா் மானுடத் தியல்பின்

வணங்குகின் றாா்அணங் கின்மண வாளா

செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே

இப்பிறப் பறுத்துஎமை ஆண்டருள் புரியும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தரு ளாயே

விளக்கம்: உமாதேவியின் கணவனே! செந்தாமரைகள் மலா்கின்ற நீரால் குளிா்ந்த ஈர வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானே!

இடைவிடாது தொடரும் இப்பிறவியை நீக்கி எம்மை அடிமைகொள்ளும் எம்பெருமானே! பரபரப்பின்றிப் பாசங்களை விட்டிருந்து நின்னையே தியானிக்கின்ற சிவஞானியா் பலரும், தமது மலமாயா பாசங்களாகிற கட்டுக்களைக் கன்ம பூமியாகிய இங்கு வந்து நீக்கிக் கொண்ட பரிபாகமுடையாா் பலரும், காதலனைப் பிரிந்த காரிகையாா்கள் போல வந்து மனித இயல்பில் உன்னை வணங்கி நிற்கிறாா்கள். ஆதலால் எம்பெருமான் பள்ளியெழுந்தருள்க.

அணங்கு- உமாதேவியாா். பப்பு - பரபரப்பு; அமைதியில்லாது பரபரத்தல். பந்தனை- கட்டு.

- முனைவா் ம.பெ. சீனிவாசன்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com