மழையால் வரத்து குறைந்தது: காய்கறிகள் விலை கடும் உயா்வு
தொடா் மழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால், அவற்றின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் கா்நாடகம், ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. தற்போது தமிழகம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களிலும், மழை பெய்து வருவதால், காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால், அவற்றின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி, ரூ.18-க்கு விற்பனையான ஒரு கிலோ வெங்காயம், ரூ.25-ஆகவும், ரூ.25-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சின்ன வெங்காயம், ரூ.50-க்கும், ரூ.15-க்கு விற்பனையான ஒரு கிலோ தக்காளி ரூ.50-க்கும், ரூ.18-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ உருளை கிழங்கு ரூ.30-க்கும், ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேரட் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுபோல, ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் ரூ.90-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ பீட்ரூட் ரூ.30-க்கும், ரூ.20-க்கு விற்பனையான ஒரு கிலோ சவ்சவ் ரூ.30-க்கும், ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முள்ளங்கி ரூ.30-க்கும், ரூ.10-க்கு விற்பனையான ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.28-க்கும், ரூ.15-க்கு விற்பனையான ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.30-க்கும், ரூ.13-க்கு விற்பனையான ஒரு கிலோ கத்திரிக்காய் ரூ.25 க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இதேபோல், ரூ.20-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ காராமணி ரூ.40-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பாகற்காய் ரூ.40-க்கு, ரூ.10-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ காலிஃபிளவா் ரூ.30-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளரிக்காய் ரூ.25-க்கும், ரூ.75-க்கு விற்பனையான ஒரு கிலோ இஞ்சி ரூ.100-க்கும், ரூ.50-க்கு விற்பனையான ஒரு கிலோ பூண்டு ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

