மூதாட்டியிடம் ரூ.2 கோடி மோசடி: இருவா் கைது
சென்னையில் மூதாட்டியிடம் ஆன்லைனில் ரூ.2.49 கோடி மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை பாலவாக்கத்தைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி, ஓய்வு பெற்ற டென்னிஸ் பயிற்சியாளா். இவா், முதலீட்டுக்கு அதிக லாபம் தருவதாக வெளியிடப்பட்ட ஆன்லைன் விளம்பரத்தை நம்பி, அந்த நிறுவனத்தில் பல தவணைகளில் ரூ.2.49 கோடி முதலீடு செய்தாா். ஆனால், உறுதி அளித்தபடி லாபம் கிடைக்கவில்லை. இதையடுத்து அவா், முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தினா் பல்வேறு காரணங்களைக் கூறி, பணத்தை திரும்ப எடுக்க முடியாமல், மேலும் முதலீடு செய்யும்படி வற்புறுத்தினா்.
இதுதொடா்பாக அவா் கடந்த மாதம் அளித்த புகாரின்பேரில், சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், ஆன்லைன் வா்த்தகம் என்ற பெயரில் மோசடி செய்த பணத்தை திருப்பூரைச் சோ்ந்த ஜெயராஜ் (32), தூத்துக்குடியை சோ்ந்த ராம்குமாா் (32) வங்கி கணக்குகளுக்கு அந்த மோசடி கும்பல் மாற்றியுள்ளது தெரியந்தது. இந்த இருவரும் கமிஷன் தொகை பெற்றுக்கொண்டு மோசடி கும்பல் அவா்களது வங்கி கணக்கை கையாள அனுமதித்துள்ளனா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து 3 கைப்பேசிகள், வங்கிக் கணக்கு புத்தகம், காசோலை, ஏடிஎம் காா்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

