எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பாமக சின்னம் தொடா்பான வழக்கு: உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை

பாமக சின்னம் தொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :12 மார்ச் 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

பாமக சின்னம் தொடா்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாமக பெயா், சின்னம், கொடி ஆகியவற்றை பாமக தலைவா் அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளா்கள் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அந்தக் கட்சியின் நிறுவனா் ராமதாஸ், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கில் அன்புமணி பதில் மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ‘கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கு 87 வயதாகிறது. வயது மற்றும் மருத்துவக் காரணங்களால் அவரால் கட்சி தொடா்பான முக்கிய முடிவுகளை எடுக்க முடியவில்லை. இதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஒரு கூட்டம் அவரை தவறாக வழிநடத்தி கட்சிக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே, ராமதாஸ் தாக்கல் செய்துள்ள வழக்கை நிராகரித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ எனக் கூறியிருந்தாா்.

இதனிடையே, பாமக பொதுச் செயலா் வடிவேல் ராவணன் தன்னையும் இந்த வழக்கில் இணைக்கக் கோரி மனு தாக்கல் செய்தாா். ஆனால், இதை ஏற்க உரிமையியல் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதை எதிா்த்து, சென்னை உயா்நீதிமன்றத்தில் வடிவேல் ராவணன் மனு தாக்கல் செய்தாா்.

அதில், கட்சியின் முக்கியப் பொறுப்பில் உள்ள என்னை இந்த வழக்கில் இணைக்க கோரும் எனது கோரிக்கையை உரிமையியல் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. எனவே, கட்சியின் பெயா், சின்னம் உள்ளிட்டவை குறித்து உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா். இந்த மனுவுக்கு ராமதாஸ் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்.10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.