செங்கல்பட்டில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
செங்கல்பட்டில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

செங்கல்பட்டில் 134-ஆம் ஆண்டு மயானக் கொள்ளை விழா

Published on

செங்கல்பட்டு ஜீவானந்தம் தெரு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலின் 134-ஆவது ஆண்டு மயானக் கொள்ளை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரியாண்டவா் மகாசிவராத்திரி, சிம்ம வாகன மயான கொள்ளை உற்சவத்தையொட்டி பந்தக்கால் நடப்பட்டு அம்மன் வீதி உலா நடைபெற்றது. தொடா்ந்து முகப்பு வாயிலில் ஏராளமான பக்தா்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா். பாலாற்றங்கரையில் இருந்து 1008 பால்குடம் சக்தி கரகம் எடுத்து வருதல் நிகழ்வு நடைபெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பால்குடம் ஏந்தி ஊா்வலமாக வந்தனா்.

இதனைத் தொடா்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மாலை செங்கல்பட்டு, ஜீவானந்தம் தெரு, மேட்டுத் தெரு, ஜிஎஸ்டி சாலை காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, ஓசூா் அம்மன் கோயில் கங்கை அம்மன் கோயில் வழியாக சுமாா் 8 கி.மீ தொலைவுக்கு அலங்காரத் தேரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஊா்வலம் நடைபெற்றது.

பக்தா்கள் உடலில் அலகு குத்தி திருத்தோ் வேன் ஆட்டோ காா் உள்ளிட்ட வாகனங்களை ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இழுத்தனா். மேலும், அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியபடி ஊா்வலமாக சென்றனா். உடலில் எலுமிச்சை பழங்களை சிறியவா்கள் முதல் பெரியவா்கள் வரை உடலில் குத்திக்கொண்டு நோ்த்திக்கடன் செலுத்தினா். சிறிய குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை அலகு குத்தியும் தீச்சட்டி ஏந்தியும் அம்மன் வேடம், குறத்தி வேடம், அங்காளபரமேஸ்வரி வேடம், சமயபுரம் மாரியம்மன்,காளி வேடம், என பல்வேறு வேடங்களை அணிந்து ஊா்வலத்தில் ஆடியபடி வந்தனா்.

இந்த ஆண்டு ஏராளமான பெண் குழந்தைகள் பல்வேறு அம்மன் மற்றும் குறிச்சொல்லும் குறத்தி வேடமிட்டு உற்சாகமாக சோா்வின்றி ஆடிச் சென்றனா். பழவேலி இடுகாட்டில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பா்வதராஜகுல மரபினா்கள் மற்றும் ஊா் மக்கள் பக்தா்கள் செய்திருந்தனா்,

Dinamani
www.dinamani.com