டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தி.மு.க. கவுன்சிலர்கள் கோஷ்டி மோதலால் கத்திவாக்கம் நகராட்சி முடங்கும் அபாயம்

 சென்னை, ஜூலை 3: கத்திவாக்கம் நகர்மன்ற தி.மு.க. கவுன்சிலர்கள் இரு கோஷ்டிகளாக செயல்படுவதால் மன்றக் கூட்டங்களை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், நகராட்சியின் அத்தியாவசியப் பணிகள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:10 am

முகவை க.சிவக்குமார்

 சென்னை, ஜூலை 3: கத்திவாக்கம் நகர்மன்ற தி.மு.க. கவுன்சிலர்கள் இரு கோஷ்டிகளாக செயல்படுவதால் மன்றக் கூட்டங்களை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால், நகராட்சியின் அத்தியாவசியப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 சென்னையை அடுத்த கத்திவாக்கம் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. தி.மு.க.வைச் சேர்ந்த முருகவேல் தலைவராகவும், திருசங்கு துணைத் தலைவராகவும் உள்ளனர்.

 கவுன்சிலர்களாக தி.மு.க-14, காங்கிரஸ்-2, அ.தி.மு.க-8 பேர் பதவியில் உள்ளனர்.

 துவக்க காலத்தில் நகர்மன்றக் கூட்டங்கள் சுமுகமாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக கூட்டங்களை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 தி.மு.க கவுன்சிலர்கள் இரு கோஷ்டிகளாக மாறியதே இதற்கு காரணம். திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் சிவாஜியின் ஆதரவாளரான நகர்மன்றத் தலைவர் முருகவேலுக்கு பாபு, பிரபாகரன், சித்திரை, நிஷா ஆகியோர் மட்டுமே ஆதரவு உள்ளது. ஆனால் இவருக்கு எதிராக மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி. சாமியின் ஆதரவாளர்களான நகரச் செயலாளர் பாண்டியன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் வீரச்சந்திரன், மஞ்சன் உள்ளிட்ட தி.மு.க கவுன்சிலர்கள் 11 பேர் மற்றும் 2 காங்கிரஸ் கவுன்சிலர்கள் தொடர்ந்து மன்றக் கூட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 இதனால் கடந்த சில மாதங்களாக நகர்மன்றக் கூட்டங்கள் தொடர்ந்து தள்ளி வைக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து அ.தி.மு.க கவுன்சிலர்களின் ஆதரவுடன் தி.மு.க-வைச் சேர்ந்த நகர்மன்றத் தலைவர் முருகவேல் கூட்டத்தை நடத்தி வந்தார். இதற்கு எதிர்ப்பு கோஷ்டியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். மேலும் நகர்மன்றத் தலைவர் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இழந்துவிட்டார்.

 எனவே தலைவர் பதவியில் இருந்து நீக்கும் படி மண்டல நகராட்சி நிர்வாக ஆணையரிடம் இவர்கள் சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டதை அடுத்து இக்கோரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனாலும் கோஷ்டி பூசல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

 அதிமுக ஆதரவுடன் தீர்மானம்: இந்நிலையில் கத்திவாக்கம் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. ஆனால் அமைச்சர் ஆதரவு தி.மு.க கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, கூட்டம் ரத்து செய்யப்பட்டது. நகர்மன்றத் தலைவர் முருகவேல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பல்வேறு பணிகளுக்கு நகர்மன்ற ஒப்புதல் பெறாவிட்டால் பணிகள் முடங்கும். அரசு நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து வெள்ளிக்கிழமை பிற்பகல் நகர்மன்ற சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது.

 இருப்பினும், இக் கூட்டத்தை ஒத்தி வைக்கும்படி தி.மு.க கவுன்சிலர்கள் 9 பேர் வற்புறுத்தினர். ஆனால், அ.தி.மு.க கவுன்சிலர்களின் ஆதரவோடு அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக கூறி நகர்மன்றத் தலைவர் கூட்டத்தை முடித்தார்.

 இதனால், தி.மு.க. கவுன்சிலர்கள் சிலர் நகர்மன்றத் தலைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நாற்காலி, ஒலிபெருக்கி உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கிவிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 பொது மக்கள் கருத்து: கத்திவாக்கம் தொழிற்சாலைகள் நிரம்பியப் பகுதி. மீனவ குப்பங்கள், ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. குடிநீர்த் தட்டுப்பாடு, குப்பைகள் அகற்றுதல், சுற்றுச் சூழல் சீர்கேடு உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். ஆனால் நகராட்சி நிர்வாகம் இப் பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கறையின்றி உள்ளது.

 மக்கள் பிரதிநிதிகள் தங்களது சுய லாபங்களைத் தவிர்த்து பொதுமக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள் என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.